/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
அழகி போட்டியில் கோலோச்சிய மங்களூரு மங்கை
/
அழகி போட்டியில் கோலோச்சிய மங்களூரு மங்கை
ADDED : ஏப் 21, 2025 05:19 AM

கடின உழைப்பும், திறமையும், புத்திசாலித்தனமும் இருந்தால் காலம், நேரம் இவற்றையெல்லாம் நம்பி இருக்க தேவையில்லை என்பதை உணர்த்தி உள்ளார், மங்களூரை சேர்ந்த அழகிய மங்கை ஜெனிகா சானியா டிசோசா.
மங்களூரில் உள்ள ஜெப்பு குட்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெனிகா சானியா டிசோசா, 17. இவரது பெற்றோர் ஜேசன் அசு பீட்டர் டிசோசா, ஷாந்தி ஷெர்மிளா டிசோசா ஆவர்.
ஜெனிகா, பென்டூரில் உள்ள புனித தெரசா பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்து முடித்தார். பி.யு.சி., படிப்பிற்காக மங்களூரில் உள்ள புனித அலோசியஸ் கல்லுாரியில் சமீபத்தில் படித்து முடித்தார்.
கால்பந்து
இவருக்கு சிறு வயதில் இருந்தே கால்பந்து, கூடைப்பந்தில் ஆர்வம் அதிகமாக இருந்து உள்ளது. இதனால், படிக்கும் போதே இரு விளையாட்டுகளிலும் பயிற்சியில் ஈடுபட்டார். இதற்கு அவரது பெற்றோரும் முழு ஆதரவு அளித்தனர்.
இதனால், கால்பந்து, கூடைப்பந்து இரு போட்டிகளிலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றார். அவரது திறமைக்கு, மாவட்ட அளவெல்லாம் கம்மியாக இருந்து உள்ளது.
கால்பந்து போட்டியில் தேசிய அளவிலான வீராங்கனையாகவும், கூடைப்பந்து போட்டியில் மாநில அளவிலான வீராங்கனையாகவும் வலம் வந்தார்.
இதனால், பள்ளியில் பிரபலமான நபராக மாறினார். இப்படியே காலம் கடந்த நிலையில், பி.யு.சி., தேர்வு முடிந்து வீட்டில் இருந்த போது, மாடலிங் துறையில் வாய்ப்பு எனும் செய்தியை படித்து உள்ளார்.
அச்செய்தியில் குறிப்பிட்டியிருந்த மாடலிங் அகாடமியை தொடர்பு கொண்டார். மங்களூரு பல்லாக் நாகரில் உள்ள வென்ஸ் மாடல் அகாடமிக்கு சென்று விசாரித்து உள்ளார்.
முதல் அடி
மாடலிங் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி அகாடமியின் உரிமையாளரும், பயிற்சியாளருமான வென்சிட்டா டையாஸ் விளக்கி உள்ளார். இதனால், அந்த அகாடமியில் கடந்த மாதம் சேர்ந்தார். மாடலிங் உலகில், தன் முதல் அடியை எடுத்து வைத்தார்.
அதுவரை மாடலிங் என்றால் என்னவென்று தெரியாத ஜெனிகா, மாடலிங்கில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். அகாடமியில் இணைந்ததுமே, இன்னும் சில நாட்களில் பக்ரைன் நாட்டில் 'மிஸ் குட்லோட்சவா 2025' அழகிப்போட்டி நடக்க இருப்பதை அறிந்தார்.
இந்த அழகிப் போட்டி உலகெங்கிலும் உள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்காக நடத்தப்படுவதாகும். இதற்காக சில நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்றார். கடினமாக உழைத்தார். தானும் ஒரு மாடல் என நினைத்து கொண்டு, முழு நேரப் பயிற்சியில் ஈடுபட்டார்.
கம்பளம் விரிப்பு
இதன் காரணமாக சமீபத்தில் பக்ரைனில் நடந்த அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இப்போட்டியில், பல நாட்டை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முதன் முறையாக உலக அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டாலும், அவருடைய செயல்பாடு பல ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருந்தவர் போன்று காணப்பட்டது.
அப்போட்டியில் இரண்டாவது பரிசை பெற்று சாதனை படைத்து உள்ளார். முதல் முயற்சியிலே, அதுவும் சில நாட்களிலே பயிற்சி பெற்ற ஒருவர், 'அழகி' பட்டத்தை பெற்றது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. இவரை, ஆசிரியர்கள், பயிற்சியாளர், பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து ஜெனிகா கூறியதாவது:
'மிஸ் குட்லோட்சவா 2025' போட்டியில் முதல் ரன்னர் அப்பாக வந்தேன். முதல் முறையாக போட்டியில் கலந்து கொள்வதற்கு மிகுந்த தைரியம் தேவை. இந்த தைரியத்தை எனக்கு தந்தது, என் பயிற்சியாளர் வென்சிட்டா டையாஸ் மற்றும் பள்ளி ஆசிரியைகள். என் முதல் போட்டியிலே பரிசு பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

