ADDED : ஆக 24, 2025 11:15 PM

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்களுக்கு, வயது ஒரு தடையே அல்ல என்பதை, ஏற்கனவே பலர் நிரூபித்துள்ளனர். மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் சாதிக்க முடியாதது, எதுவுமே இல்லை. இதற்கு வில்மா கிராஸ்தா சிறந்த எடுத்துக்காட்டு.
உடுப்பி மாவட்டம், குந்தாபுராவை சேர்ந்த பெண், வில்மா கிராஸ்தா கர்வாலோ, 57. இவர் கார்ப்பரேட் டிரெய்னராக பணியாற்றுகிறார். இவருக்கு பைக் ஓட்டுவது பொழுது போக்கு. ஆண்களுக்கு சமமாக பைக் ஓட்டுவதில் கை தேர்ந்தவர். தன் மகள் செரஷ் கர்வாலோவுடன், பைக்கிலேயே பல சிகரங்களுக்கு சென்று வந்துள்ளார். இவரது சாதனை சாதாரணமானது அல்ல.
19,024 அடி உயரம் பல முறை இமயமலை பாதையில், பைக்கில் பயணித்து வந்துள்ளார். 2023ல் பைக்கில் உலகின் மிக உயரமான உம்லிங் பாஸுக்கு சென்றிருந்தார். கடல் மட்டத்தில் இருந்து 19,024 அடி உயரம் உள்ள இப்பகுதி, இந்தியா - சீனா எல்லையில் லடாக்கில் உள்ளது. மலைகள், குன்றுகள் கொண்ட கடினமான பாதையாகும். மனதிடம் கொண்ட சாகச பிரியர்கள் மட்டுமே, இத்தகைய பாதையில் பைக் ஓட்ட முடியும். வில்மா பைக்கில் இந்த மலையேறும் போது, அவருக்கு 55 வயதாகும்.
லடாக்குக்கு வில்மா மூன்று முறை பைக்கில் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை சுதந்திர தினத்தை சாதனை செய்து கொண்டாடியுள்ளார். தன் மகள் செரஷுடன், சீனா எல்லை அருகில் உள்ள, சியாச்சின் கிளேசியர் சிகரத்தில் கொடியேற்றினார். வெறும் எட்டு நாட்களில், 1,300 கி.மீ., துாரம் பைக்கில் பயணித்து, கிளேசியர் சிகரத்துக்கு சென்றார். இந்த சிகரம் 17,720 அடி உயரத்தில் உள்ளது.
காலையிலேயே கொடியேற்ற விரும்பினார். ஆனால், அவரது பயணம் மிகவும் கடினமாக இருந்ததால், அங்கு சென்றடைய தாமதமானது; மதியம் கொடியேற்றினார். 57 வயதில் இவரது சாதனை சாதாரணமானது அல்ல. அபாயமான மலைப்பாதையில், எந்த பயமோ, தயக்கமோ இன்றி துணிச்சலாக பைக் ஓட்டி, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.
பிடிவாதம் வில்மா கூறியதாவது:
என் மகள் செரஷின் ஒத்துழைப்பால், என்னால் சாதிக்க முடிந்தது. கார்கில் அருகில் உள்ள குர்கான் வழியாக, சியாச்சினை அடைந்தேன். இலக்கை எட்ட 60 கி.மீ., துாரம் இருந்த போது, சோர்வால் பயணத்தை முடித்து கொள்ள நினைத்தேன். ஆனால் இலக்கை எட்டியே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன், பயணத்தை முடித்தேன்.
கிளேசியர் சிகரத்தில் கொடியேற்றியது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வழியில் குந்தாபுராவை சேர்ந்த சைக்ளிஸ்ட் தினேஷ் கர்ணாவை சந்தித்தோம். அவருடன் என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இது எனக்கு கிடைத்த மற்றொரு மகிழ்ச்சியான விஷயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.