ADDED : ஜூன் 21, 2026 10:40 PM

- நமது நிருபர் -
இன்றைய காலத்தில், 30 வயதை தாண்டி விட்டாலே, பெண்கள் பலருக்கு சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது. கை வலி, கால் வலி என முணுமுணுத்தபடியே வேலை செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், 74 வயதிலும் பெண் ஒருவர் விவசாயத்தில் அசத்துகிறார்.
மைசூரு மாவட்டம், பிரியாபட்டணா தாலுகாவின், புட்டண்ணா கனகல் கிராமத்தில் வசிப்பவர் பத்மம்மா, 74. இவரிடம், 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து, வாழ்க்கை நடத்துகிறார். இந்த வயதிலும் அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் குறையவில்லை. ஆண்களே வெட்கப்படும் அளவுக்கு விவசாயத்தில் சிறந்து விளங்குகிறார்.
தனது, ஏக்கர் நிலத்தில், 2 ஏக்கரை பாக்கு விளைச்சலுக்கு ஒதுக்கியுள்ளார். மீதமுள்ள, 1 ஏக்கர் நிலத்தில் ஒரு புதிய உலகத்தையே உருவாக்கியுள்ளார். வெறும், 1 ஏக்கரில் அவர், நுாற்றுக்கும் மேற்பட்ட பயிர்களை விளைவித்து, ஆச்சர்யமூட்டுகிறார்.
ராகி, நெல், கருப்பு சோளம், சிவப்பு சோளம், மல்லிகை, கருப்பு அரிசி, நறுமணம் வீசும் அபூர்வமான அரிசி வகைகள், கடலை, துவரம் பருப்பு, வெள்ளரிக்காய், பூசணி, கீரைகள், எள், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய் என, பலவிதமான விளைச்சல்களை விளைவிக்கிறார்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல், முற்றிலும் இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். இயற்கையான விதை பொருட்களை சேகரித்து வைக்கிறார். ஒவ்வொரு முறையும், அந்த விதைகளையே பயிரிடுகிறார். விவசாய மேளாக்களில் பங்கேற்று, தன் விளைச்சல்களை கண்காட்சிக்கு வைக்கிறார். தனக்குள்ள விவசாய அறிவை பயன்படுத்தி, மற்றவருக்கு விவசாயத்தை பற்றி, ஆலோசனை கூறுகிறார்.
விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தொலைபேசி மூலமாகவும் பாடம் எடுக்கும் 'ஹைடெக்' விவசாயி இவர். தேவைப்படுவோருக்கு தபால் மூலமாக, விதைகளை பார்சலில் அனுப்புகிறார். விளைச்சல்கள் மூலமாக ஆண்டுக்கு, ௬ லட்சம் ரூபாய் வருவாய் சம்பாதிக்கிறார். 74 வயதிலும் இளம் பெண்ணை போன்று சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்.
பத்மம்மா கூறியதாவது:
விவசாயம் நம் முன்னோர்கள் காப்பாற்றி வந்த பொக்கிஷம். இந்நாட்டு விதைகளுக்கு நம் மண்ணை காப்பாற்றும் சக்தி உள்ளது. ரசாயனங்கள் நுழைந்ததால் நாம் ஆணிவேரை மறந்துவிட்டோம். நம் நாட்டு விதை வித்துக்களை காப்பாற்றினால் மட்டுமே, நமது எதிர்காலம் பிழைக்கும். மண்ணுக்கும், இயற்கைக்கும் நாம் நல்லது செய்தால், அவை நமக்கு எப்போதும் துரோகம் செய்யாது.
இவ்வாறு அவர் கூறினார்.
