ADDED : ஜூன் 21, 2026 10:41 PM

- நமது நிருபர் -
சிக்கபல்லாபூரில் இருந்து தொட்டபல்லாபூருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பயணம் செய்யும் போது, டிரைவர் இருக்கையில் அமர்ந்து பெண் ஒருவர் பஸ்சை திறமையாகவும், லாவகமாகவும் ஓட்டி செல்வதை வாய்ப்பு கிடைத்தால், பார்க்கலாம். அந்த பெண்ணின் பெயர் வீணா ஹொசம்மா, 46.
அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றுவது குறித்து வீணா ஹொசம்மா கூறியதாவது:
எனது சொந்த ஊர் சிக்கபல்லாபூரின் சிந்தாமணி. நான், பி.ஏ., பட்டதாரி. சிறு வயதில் இருந்தே வாகனங்கள் மீது எனக்கு அலாதி பிரியம். எனது, 14 வயதிலேயே கியர் பைக் ஓட்ட கற்று கொண்டேன். எப்போது, 18 வயது ஆகும் என காத்து இருந்தேன். அந்த வயது வந்ததும் ஓட்டுநர் உரிமம் வாங்கினேன். முதலில் கார் ஓட்ட கற்று கொண்டேன்.
டிரைவிங் மீது எனக்கு இருந்த ஆர்வத்தால், இலகு ரக வாகனங்களில் இருந்து கனரக வாகனங்களையும் ஓட்ட கற்று கொண்டேன். எனது தம்பி லாரி டிரைவர். அவருக்கே லாரி ஓட்ட நான் தான் பயிற்சி அளித்தேன். 2016ம் ஆண்டு கர்நாடக அரசின் போக்குவரத்து கழகத்தின் கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் காலியாக இருந்த டிரைவர் - கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது.
நான், அதற்கு விண்ணப்பித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். அப்போது நானும், விஜயபுராவின் அமீனா நடாப்பும் பணிக்கு தேர்வானோம். மலவள்ளியில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பினர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள், மழைக்காலங்களில் பஸ்களை எப்படி இயக்குவது என்று பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கு பின், எனக்கு விருப்பமான பணி இடமாக தொட்டபல்லாபூர் பணிமனையை தேர்வு செய்தேன். பெரும்பாலும் எனக்கு பகல் நேர பணி தான் கிடைக்கிறது.
இதுவரை எனது பணி அனுபவத்தில் நான் கவனித்த விஷயம் என்னவென்றால், நகர்புற பகுதிகளில் பெண்கள் பஸ் ஓட்டும் போது பாராட்டும் மக்கள், கிராமப்புறத்தில் பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டி செல்லும் போது பாராட்டுவது இல்லை. கிராமப்புற பெண்கள் ஏதாவது சவாலை ஏற்க முன்வந்தாலும் உறவினர்கள், குடும்பத்தினர் ஏதாவது சொல்லி அவமதிக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். குடும்பத்தினர் முழு ஆதரவால் தான் நான் டிரைவர் ஆனேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
