/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பெண்கள் பாதுகாப்புக்கு தயாராகும் 'சகி ஆட்டோ'
/
பெண்கள் பாதுகாப்புக்கு தயாராகும் 'சகி ஆட்டோ'
ADDED : பிப் 09, 2026 05:01 AM

- நமது நிருபர் -:
பெங்களூரு வேகமாக இயங்கி கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்று. இங்குள்ள மக்களும் வேகமாக செயல்படக்கூடியவர்கள். இங்கு பொறுமை எனும் பேச்சுக்கே இடமில்லை. அவ்வகையில், பொறுமையாக பஸ் நிறுத்தத்தில் நின்று, பஸ்சுக்காக காத்திருந்து பஸ்சில் செல்வர்களை பார்ப்பது அரிது.
அந்த காலத்தில் நம் அப்பா, அம்மா பணத்தை மிச்சம் செய்வதற்காக ஆட்டோவில் செல்லாமல் பல மணி நேரம் நின்று பஸ்சில் பயணித்தனர். அப்போது, நேரத்தை விட பணம் தான் முக்கியமாக இருந்தது. தற்போது, பணத்தை விட நேரம் தான் முக்கியம் எனலாம். இதனாலே, அரை மணி நேரம் நின்று பஸ்சில் 20 ரூபாயை செலவு செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு பதிலாக, ஆட்டோவில் 100 ரூபாய் கொடுத்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணிக்கின்றனர்.
அறிமுகம் இது குறித்து கேட்டால், அடுத்தடுத்து வேலைகள் உள்ளன. பஸ்சுக்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்கின்றனர். இதனாலே, ஆட்டோக்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தின் போது, சில பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். இது குறித்து, வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாவது வழக்கமாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில், வரும் 14ம் தேதி 'சகி ஆட்டோ' செயலி அறிமுகமாக உள்ளது.
எதிர்பார்ப்பு அதாவது, பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு பெண் ஓட்டுநர்கள் மட்டுமே கொண்ட சிறப்பு செயலி, சேவைக்கு வர உள்ளது. இந்த செயலி ஓலா, ராபிடோ, ஊபர் போன்ற செயலிகளை போலவே செயல்படும். ஆனால், ஓட்டுநர் மட்டும் பெண்கள்.
இந்த செயலி காலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை இயங்கும். வரும் காலத்தில் 24 மணி நேரமும் செயல்படும். 2 கி.மீ., துாரம் வரை பயணிக்க 50 ரூபாய் அடிப்படை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
'வாட்ஸாப்' அல்லது இணையதளத்திலும் ஆட்டோவை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. தற்போதைக்கு அனைத்து வருமானமும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு செல்கிறது. பிற்காலத்தில் கமிஷன் தொகையை நிறுவனம் பிடிக்கும் என அந்நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணவி பரேக் கூறி உள்ளார்.
முற்றிலும் பெண் பயணியருக்காக, பெண்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, பெண் ஓட்டுநர்களால் இயங்கவுள்ள 'சகி ஆட்டோ' சேவையை பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

