/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
புராண நாடகங்களுக்கு இசை இயக்குநர் பணி; முத்திரை பதிக்கும் சவிதா
/
புராண நாடகங்களுக்கு இசை இயக்குநர் பணி; முத்திரை பதிக்கும் சவிதா
புராண நாடகங்களுக்கு இசை இயக்குநர் பணி; முத்திரை பதிக்கும் சவிதா
புராண நாடகங்களுக்கு இசை இயக்குநர் பணி; முத்திரை பதிக்கும் சவிதா
ADDED : மார் 16, 2026 06:55 AM

- நமது நிருபர் -
பெண்கள் சமையல் அறைக்குள் மட்டும் இருந்த காலம் மாறி, அனைத்து துறைகளிலும் சாதிக்கும் திறன் படைத்தவர்களாக உருவாகி வருகின்றனர்.
திருவிழாக்களின் போது புராண நாடக நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் நடக்கும். ஆனால் சமீப காலங்களில் இத்தகைய புராண நாடகம், யக் ஷ கானா, கோலாட்டம் உள்ளிட்ட கிராமப்புற கலைகள் குறைந்து வருகின்றன.
ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவின் நெர்லகேர் கிராமத்தை சேர்ந்தவர் சவிதா குமார். ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர், புராண நாடகங்கள் மீதான ஈர்ப்பால், அப்பணியை ராஜினாமா செய்தார். பின் புராண நாடகத்தின் இசை இயக்குநராக, கிராமப்புற கலையை பாதுகாக்க உழைத்து வருகிறார்.
இவர், விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தின் செயலராகவும் உள்ளார். தனது கல்வி வாழ்க்கையில் பள்ளி நிகழ்ச்சிகளின் போது பல கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருமணத்துக்கு பின்னரும், புராண நாடகங்களை கற்பிப்பதிலும், நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார். கடந்த 15 ஆண்டுகளாக இசை இயக்குநராக புராண நாடகங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
நாடக கலைஞர் ரங்கராஜேகவுடா கூறியதாவது:
நானும் சிறு வயதில் விளையாட்டில் சிறந்து விளங்கினேன். கபடி எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. சில நாடகங்களில் நடித்துள்ளேன். எங்கள் கிராமத்தை சேர்ந்த சவிதா குமார், 'குருஷேத்ரா அல்லது தர்ம ராஜ்ய சுகி', 'ராஜ சத்யவிரதா அல்லது சனி பிரபவ' மற்றும் தேவி மஹிமே உட்பட 60க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தி உள்ளார்.
சமீபத்தில் சென்னராயபட்டணாவில் 'குருஷேத்ரா அல்லது தர்ம ராஜ்ய சுகி' என்ற புராண நாகடத்தில், ஆண்கள் யாரும் நடிக்காமல், அனைத்து கதாபாத்திரத்தையும் பெண்களே ஏற்று நடித்து, வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சவிதா குமார் கூறியதாவது:
என் வேலை எதுவாக இருந்தாலும், கலையை பாதுகாக்கவும், வளர்க்கவும் நான் கடுமையாக உழைப்பேன். வேலை செய்யும் ஆசையுடன் இந்த துறைக்கு வரவில்லை.
கிராமப்புற அழகும், கலையும் நிலைத்திருக்க வேண்டும். அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு விதைகளை விதைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஹாசன் மாவட்டத்தில் மட்டும் அல்ல; மாநிலத்தில் ஒரு நாடகத்தின் இசை இயக்குநராக ஒரு பெண் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரின் பணியை பராட்டி கன்னட ராஜ்யோத்சவா விருது, தாலுகா நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு கலை சங்கங்களால் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டு உள்ளார்.

