ADDED : ஏப் 13, 2026 01:13 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் வடமாவட்டங்களில், சோள ரொட்டி பிரபலமான சிற்றுண்டி. இந்த ரொட்டி பசியை போக்குவதுடன், பல பெண்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. இதையே தொழிலாக்கி முன்னேறுகின்றனர்.
விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி கம்பளே. இவர் கர்நாடக மாநில அக்க மஹாதேவி பல்கலையில், பி.ஹெச்.டி., முடித்தவர். கிராமத்து பெண்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவர். பல பெண்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.
வயல்கள், தோட்டங்களில் நாள் முழுதும் பாடுபட்டும், வாழ்க்கை நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
சில பெண்கள் அதிக ஊதியத்துக்காக, வேறு மாநிலங்களுக்கு பிழைக்க செல்கின்றனர். பெண்களின் இத்தகைய சூழ்நிலையால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிப்படைகிறது. பெற்றோர் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது, பிள்ளைகளும் செல்ல வேண்டியுள்ளது. இதனால், படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
இதைக்கண்ட புவனேஸ்வரி கம்பளே, பெண்களை ஒன்று சேர்த்து சுய உதவி குழுக்கள் அமைத்தார். அவர்களை சுய தொழில் துவக்க ஊக்கப்படுத்தினார்.
ஆரம்பத்தில் நகர்ப்பகுதிகளில் டிமாண்ட் உள்ள விளைச்சல்களை பயிரிட வைத்தார். அதன்பின் வீட்டு மருந்துகள் தயாரிப்பது, உணவு பொருட்கள் தயாரிக்கும்படி ஆலோசனை கூறினார்.
பெண்களுடன் ஆலோனை கூட்டம் நடந்த போது, பெண்கள் தாங்கள் விளைவிக்கும் வேர்க்கடலையை, அப்படியே விற்பதை விட வேர்க்கடலையை பயன்படுத்தி போளி தயாரித்து விற்றால், அதிக லாபம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார். அதன்படி பெண்கள் பலரும், கோதுமை மாவு, வெல்லம், வேர்க்கடலை பயன்படுத்திய போளி தயாரித்து, பெங்களூரில் விற்பனை செய்த போது, அமோகமாக விற்பனையானது.
இதனால், உற்சாகமடைந்த பெண்கள். சோள ரொட்டி தயாரித்து விற்க துவங்கினர். விஜயபுரா மாவட்டம், இன்டியை சேர்ந்த சுமித்ரா ஹலகவாடே, சோள ரொட்டி தயாரித்து விற்று வருகிறார்.
அவருடன், 40 பெண்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களில் பலர், இதற்கு முன் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்தவர்கள்.
சுமித்ரா ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும், ஆறு மணி நேரம் ஸ்டவ் முன்பாக நின்று சோள ரொட்டி தயாரிக்கிறார். இந்த ரொட்டிகள் பல இடங்களுக்கு வினியோகிக்கப் படுகின்றன.
மாதந்தோறும், 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவர் சோள ரொட்டி தயாரிக்கிறார். மற்ற பெண்கள் காய்கறி பொரியல், சட்னி தயாரிக்கின்றனர். காய்கறிகள் அவரவர் தோட்டத்தில் விளைவித்ததாகும்.
சுமித்ரா சோள ரொட்டி மட்டுமின்றி, மேலும் சில தின்பண்டங்களையும் தயாரிக்கிறார். சுமித்ரா மற்றும் அவரது குழுவினரின் சமையல் திறனை கண்டு, பெங்களூரின் பல அடுக்குமாடி குடியிருப்புகளில், சமையல் செய்து கொடுக்க அழைக்கின்றனர்.
ஆனால், நேரம் இல்லாமையால், பெண்களால் செல்ல முடியவில்லை.வரும் நாட்களில் இந்த அமைப்பில், மேலும் பல பெண்களை சேர்த்து, கூடுதல் தின்பண்டங்களை தயாரித்து விற்க, சுமித்ரா திட்டமிட்டுள்ளார்.
யாரையும் சார்ந்திராமல், சுயமாக வாழ்க்கை நடத்த சுய தொழில் பெரிதும் உதவுகிறது. இதற்கு முன் ஊர் எல்லையை தாண்டாத பெண்கள், இப்போது இரவில் பயணித்து, பெங்களூருக்கு வந்து, சுய தொழிலை கவனிக்கின்றனர்.
இவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அரசின், சக்தி திட்டம் பெரிதும் உதவுகிறது. இப்பெண்களுக்கு மாதந்தோறும் 6,000 ரூபாய் மிச்சமாகிறது. பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, புவனேஸ்வரியே காரணமாக திகழ்கிறார். அவரை பெண்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.
