/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
சத்தமின்றி சாதிக்கும் துணை முதல்வர் மகள்
/
சத்தமின்றி சாதிக்கும் துணை முதல்வர் மகள்
ADDED : ஏப் 28, 2025 06:53 AM

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவரது மனைவி உஷா. தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யா, 27. இவர் பிரபல, 'கபே காபி டே' உரிமையாளர் சித்தார்த் வீட்டின் மருமகள்.
சித்தார்த்தின் மகன் அமர்த்தியா ஹெக்டே தான் ஐஸ்வர்யாவின் கணவர். அரசியலை தவிர சிவகுமார் பள்ளிகளும் நடத்துகிறார்; வேறு சில தொழில்களும் செய்து வருகிறார்.
சிவகுமார் அரசியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பவர் ஐஸ்வர்யா.
சிவகுமாரின் பள்ளி, சில தொழில் விவகாரங்களை ஐஸ்வர்யா தான் கவனித்து வருகிறார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வது போன்று, வயது குறைவாக இருந்தாலும், சவால்களை சந்திப்பதில் கெட்டிக்காரராக உள்ளார்.
கல்வி துறையில் சத்தமே இன்றி பல சாதனை படைத்து உள்ளார்.
தொழில்முறை கல்வி பயணம் குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது:
இன்ஜினியரிங் படித்து முடித்த பின், 21 வயதில் கல்வியாளர், தொழில் முனைவோராக எனது பயணம் துவங்கியது. கல்வி தான் இந்த உலகில் எல்லாம்.
இதனால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பது எனது விருப்பம். கல்வி மூலம் தனிநபர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
தந்தையின் பல கல்வி நிறுவனங்களை நான் வழிநடத்துகிறேன். கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தங்களை சிறந்தவர்களாக மாற்றகூடிய, சூழலை வளர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.
கல்வி 4.0 கட்டமைப்பு எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது.
கல்வி அமைப்புகளுக்குள் சமூக சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், 'புட்டி பெஞ்ச் கான்வர்சேஷன்' உருவாக்கினேன். இது மாணவர்களிடையே நட்பு, சமூக தொடர்புகளை ஊக்குவிக்க உதவுகிறது. மாணவர்கள் சமூகத்தையும், கற்றலையும் வளர்க்கும் தளமாக உள்ளது.
கர்நாடக அரசின் 'பிராண்ட் பெங்களூரு' முயற்சியை ஆதரிக்கும் வகையில், இளைஞர் தலைமைத்துவ உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதை பாக்கியமாக கருதினேன்.
குலாப் சேவா அறக்கட்டளை மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுப்பதில் எனது பங்கும் உள்ளது.
பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷமாக உள்ளது. கல்வி துறையில் மேலும் சில முன்னேற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன். மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே எனது நோக்கம்.
இந்த யுக்தி மாணவர்களிடையே உந்துதலை அதிகரிக்கும். கடவுள் எனக்கு என்று ஒரு துறை கொடுத்து உள்ளார். இதில் அதிகம் சாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். அரசியலுக்கு வரும் ஆசை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -