அழகு கலை துறையில் 33 ஆண்டுகளாக சாதிக்கும் வேதா ராய்
அழகு கலை துறையில் 33 ஆண்டுகளாக சாதிக்கும் வேதா ராய்
ADDED : மார் 23, 2026 01:42 AM

- நமது நிருபர் -:
அழகு கலையில் வெற்றியை தக்க வைத்து கொள்வதற்கு விடா முயற்சியும், திறமையும், பொறுமையும், தன்னம்பிக்கையும் முக்கியம். இதனை 33 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார் மைசூரு வேதா ராய், 60.
மைசூரை சேர்ந்த வேதவதி ராய் எனும் வேதா ராய், 33 ஆண்டுகளாக அழக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். மைசூரு அழகுக்கலை நிபுணர்கள் நல சங்க நிறுவன செயலராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சங்கத்தின் தலைவராக உள்ளார்.
தனது வெற்றி கதையை அவர் கூறியதாவது:
பி.ஏ., முடித்த பின், ஆரம்பத்தில் சில பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். சொந்தமாக தொழில் துவங்க நினைத்தபோது, இத்தொழில் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காலத்தில் அழகு நிலைய தொழில் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்தது.
அப்போது அழகு கலை நிபுணர்கள், ஒப்பனை, சிகை அலங்காரம், தேவையற்ற முடிகளை அகற்றுவது போன்ற அடிப்படை வேலைகளை செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். முன்னர் முடி வெட்டுவது என்பது அமங்கலமாக கருதப்பட்ட ஒரு சமூக தடை இருந்தது. இதனால் வாடிக்கையாளர்களை குறிப்பாக பெண்களை ஈர்ப்பது கடினமாக இருந்தது. ஆடி மாதத்தில் எங்களின் தொழில் முற்றிலுமாக முடங்கி போனது. நாளடைவில் நிலைமை படிப்படியாக மாறியது.
கிராமப்புற பெண்கள் உட்பட பெண்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக, அழகு ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் கடின உழைப்பாளிகள் என்பதால் அழகு நிலையத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வெளி மாநிலத்தை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் அல்லது தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இவர்களின் உணவு எளிமையானது தான். ஆண்டு முழுதும் சாதம் அல்லது நுாடுல்ஸ் தான் அவர்கள் உட்கொள்கின்றனர். நீண்ட நாட்கள் வேலை செய்த பின், ஆண்டுக்கு ஒரு முறை விடுமுறை எடுத்து அவர்களின் ஊருக்கு சென்று வருகின்றனர்.
இந்த தொழிலில் உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால் அவர்களின் செயல் தோல்வியில் தான் முடிவடையும்.
ஆடம்பரமான அலங்காரங்களில் பணத்தை வீணாக்குவதை விட, ஒருவர் தன் திறமையை முதலீடு செய்ய வேண்டும். எந்தவொரு தொழிலும் வெற்றி பெற பொறுமை மிகவும் முக்கியம்.
முன்னர் வாடிக்கையாளர்களுக்கு சிகை அலங்காரத்தை தேர்ந்தெடுப்பதற்காக, அவர்களுக்கு பல்வேறு சிகை அலங்காரம் கொண்ட படங்கள் அடங்கிய பட்டியலை கொடுத்தோம்.
ஆனால், தற்போது மொபைல் போன்களில் தங்களுக்கு பிடித்த சிகை அலங்காரத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு, அங்களிடம் காண்பிக்கின்றனர். இத்தொழில் துவங்குபவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசின் முத்ரா திட்டம் உதவியாக உள்ளது.
நீங்கள் தகுதியானவராக இருந்தால், கடினமாக உழைக்க வேண்டும். இதற்கு பொறுமையும் அவசியம். கடினமாக உழைப்பவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு. 'என்னால் முடியும்; இதை செய்து முடிப்பேன்' என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் புதிதாக அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது ஆயுர்வேதம் பிரபலமாக உள்ளது.
பலர் மூலிகை முகப் பராமரிப்பு, பாத பராமரிப்பு என விரும்புகின்றனர்.
நான் இந்தளவுக்கு முன்னேற காரணம், மறைந்த என் கணவர் நரசிம்ம ராய் தான். என் திறமை மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அவரின் ஆதரவு இல்லாமல், என் தொழிலில் வெற்றியை சுவைத்திருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
