/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.45,000 சம்பாதிக்கும் பெண்
/
ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.45,000 சம்பாதிக்கும் பெண்
ADDED : ஜன 26, 2026 04:15 AM

ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டுவது, ஆண்களுக்கான தொழிலாக பார்க்கப்பட்டது. தற்போது ஆண்களுக்கு நிகராக, பெண்களும் ஆட்டோ ஓட்டுகின்றனர். கை நிறைய சம்பாதித்து, தலை நிமிர்ந்து வாழ்கின்றனர். குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண், மாதந்தோறும் 45,000 ரூபாய் வருவாய் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.
இன்றைய காலத்தில், ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்து பணிகளையும் செய்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்க கணவருக்கு தோள் கொடுக்கும் பெண்கள் அதிகரித்து உள்ளனர்.
போலீஸ் துறை, ஐ.டி., கல்வி, மருத்துவத்துறை, ராணுவம், விண்வெளித்துறை என, பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. தொழிலதிபர்களாகவும் முன்னேறியுள்ளனர்.
எலக்ட்ரிக் ஆட்டோ இதற்கு முன் ஆட்டோ ஓட்டுவது, ஆண்களுக்கான தொழிலாக இருந்தது. ஆட்டோ ஓட்ட பெண்கள் தயங்கினர். தற்போது ஆட்டோ ஓட்ட பெண்கள், ஆர்வமாக முன் வருகின்றனர். பெங்களூரில் ஆங்காங்கே பெண் ஓட்டுநர்களை பார்க்க முடிகிறது.
அரசும், மகளிர் அமைப்புகளும் பெண்களை ஊக்கப்படுத்துகின்றன. பெங்களூரு மாநகராட்சியும் ஆர்வம் உள்ள பெண்களுக்கு, ஓட்டுநர் பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு எலக்ட்ரிக் ஆட்டோ வாங்க மானியமும் வழங்குகிறது.
பெண்கள் பலரும் சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்டி சம்பாதிக்கின்றனர். பெண் பயணியரும் பாதுகாப்புடன் பயணிக்க, பெண் ஓட்டுநர் இயக்கும் ஆட்டோவை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண், தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, ஆட்டோ ஓட்டி சுதந்திரமாக வாழ்க்கை நடத்துகிறார்.
மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட் பணியை விட ஆட்டோ ஓட்டுவது தனக்கு நிம்மதி அளிப்பதாக அவர் கூறுகிறார்.
பெங்களூரின் கோரமங்களாவில் வசிப்பவர் ஸ்நேஹா, 35. இவர் ஆட்டோ ஓட்டி, மாதந்தோறும் 45,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
300 ஓட்டுநகர்கள் ஸ்நேஹா கூறியதாவது:
கோரமங்களாவில் 300 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். நாங்கள் வலைதளம் மூலம், தொடர்பில் இருக்கிறோம். அனைவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். பெங்களூரை போன்ற பெரிய நகரில், வாகனம் ஓட்டுவது பெரும் சவாலாகும். பைக் ஓட்டுவது வேறு, பயணியர் வாகனங்கள் ஓட்டுவது வேறு.
ஒரு பெண்ணாக, எனக்கும் இது சவாலான வேலைதான். அதை நான் அர்ப்பணிப்புடன் செய்கிறேன். என் உழைப்புக்கு கடவுளும் ஆதரவாக இருக்கிறார்.
குடும்பத்தை காப்பாற்ற, நிம்மதியாக வாழ்க்கை நடத்த போதுமான அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. எங்களுக்கு அதிக ஆசை இல்லை. பெண் ஆட்டோ ஓட்டுகிறார் என யாரும் என்னை கீழாக பார்க்கவில்லை. இதுவரை யாரும் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை.
டிராபிக் சிக்னல் அருகில் இளைஞர்கள், இளம்பெண்கள் என்னிடம் அன்போடு சிரித்து பேசுகின்றனர். இது எனக்கு பெருமை அளிக்கிறது. எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். டீசல் ஆட்டோவை விட, எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுவது எளிது. எலக்ட்ரிக் வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு நல்லது.
காற்றை மாசுபடுத்தாது. நிர்வகிப்பு செலவும் குறைவு. கடன் பெற்று ஆட்டோ வாங்கினேன். இதுவரை 2.5 லட்சம் ரூபாய் கடனை அடைத்துள்ளேன். மாதம், 45,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.
-- நமது நிருபர் -

