ஐ.டி., வேலையை துறந்து மெட்ரோ ரயில் ஓட்டுநரான இளம்பெண்
ஐ.டி., வேலையை துறந்து மெட்ரோ ரயில் ஓட்டுநரான இளம்பெண்
ADDED : மே 03, 2026 11:25 PM

- நமது நிருபர் -
ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்று அனைத்து இடங்களிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக பொது போக்குவரத்து துறையில் பெண்களது பங்களிப்பு அபாரமாக உள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க துவங்கப்பட்ட சேவை தான் மெட்ரோ ரயில். மெட்ரோ நிறுவனத்தில் பணி செய்ய பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருப்பதால், பல பெண்கள் தற்போது மெட்ரோ ரயில் லோகோ பைலட்டாக உருவெடுத்து வருகின்றனர். இவர்களில் ஒருவராக திவ்யா மணி உள்ளார்.
பெங்களூரின் நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் பசுமை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் லோகோ பைலட்டாக திவ்யா மணி உள்ளார். பெண்கள் தான் மெட்ரோ ரயில் ஓட்டுகின்றனரே, திவ்யா மணி ஓட்டுவதில் என்ன சிறப்பு என்று நினைக்க தோன்றலாம். கை நிறைய சம்பளம் கிடைக்கும் ஐ.டி., நிறுவன வேலையை உதறி தள்ளிவிட்டு, மெட்ரோ ரயில் ஓட்டுவதற்கு வந்தவர் தான் திவ்யா மணி.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பெங்களூரின் பொது போக்குவரத்து துறையில் மெட்ரோ இன்று புதிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு லட்சம் பேர் முதல் எட்டு லட்சம் பேர் வரை, மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதுபோன்ற மிகப்பெரிய நெட் ஒர்க் கொண்ட மெட்ரோ ரயிலை ஓட்டுவது என்பதே சாதனை தான். எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து விட்டு ஐ.டி., துறையில் பணியாற்றியதால், மெட்ரோ ரயில் ஓட்டும் தேர்வை, எளிதாக அணுக முடிந்தது.
மெட்ரோ ரயிலை முதன் முதலாக ஓட்டியது மறக்க முடியாத அனுபவம். ஷிப்ட் அடிப்படையில் தினமும் எட்டு மணி நேர பணி.
தினமும் 150 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் ஓட்டுகிறேன். துணிச்சலும், கவனமும் இருந்தால், மெட்ரோ ரயில் ஓட்டி சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
