தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா

சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா

சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா


ADDED : மார் 21, 2025 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரை சேர்ந்த அனன்யா, கர்நாடகாவின் 31 மாவட்டங்களில் கடல் வழியாக தன்னந்தனியாக சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது மனோதிடம், தைரியம் மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.

பெங்களூரு லக்கரேவில் வசிப்பவர் அனன்யா, 25. இவர் சுற்றுலா மற்றும் பயண நிர்வகிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் சாகச பிரியை. ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்.

படிப்பை முடித்த பின், இரண்டு ஆண்டுகள் டிராவல் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு அவருக்கு அதிக அனுபவம் கிடைத்தது. பயண விஷயத்தில் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம், ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என, ஆலோசித்தார்.

நீர் சாகசம்


கல்லுாரியில் அனன்யா படிக்கும் போது, பாதயாத்திரை, பாறைகள் மீது ஏறுவது, நீரில் சாகசம் செய்வதில் ஆர்வத்தை வளர்த்து கொண்டார். சாகச சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகாவில் இருந்தே, தன் சாகச பயணத்தை துவக்கியுள்ளார். நடப்பாண்டு ஜனவரி 25ம் தேதி, இந்திய சுற்றுலா தினத்தன்று, தனியாக பயணத்தை துவக்கினார். இதுவரை 14 மாவட்டங்களுக்கு சென்று, சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக, அனன்யா கூறியதாவது:

கர்நாடகாவின் சாகச விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய விரும்பினேன். ஜனவரி 25ம் தேதி, என் பயணத்தை துவக்கினேன். மார்ச் இரண்டாம் வாரம் வரை 14 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு முதல் மூன்று நாட்கள் தங்குகிறேன்.

அந்தந்த மாவட்டங்களின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை விட, சாகச விளையாட்டுகளை ஆய்வு செய்கிறேன். அடுத்த மூன்று மாதங்களில், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வேன்.

சிறப்பு அனுபவம்


ரயில்கள், அரசு பஸ்களில் பயணிக்கிறேன். அரசு பஸ்களில் பயணிப்பதால், உள்ளூர் மக்களை தொடர்பு கொள்ள முடிகிறது. மாநிலத்தின் சிறப்புகள், அழகை தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எனக்கு, ஒவ்வொரு விதமான சிறப்பு அனுபவம் கிடைத்தது.

குடகில் ரிவர் ராப்டிங், கார்வாரில் பாரா செய்லிங், பாதாமியில் ராக் கிளைம்பிங், பண்டிப்பூரில் ஜங்கிள் சபாரி சாகசம் செய்தேன். என் பயணத்தின் போது, சாகச விளையாட்டுகளில் பங்கேற்பதுடன், உள்ளூர் வழிகாட்டிகளை சந்திக்கிறேன். அவர்களிடம் சாகச சுற்றுலா குறித்து தெரிந்து கொள்கிறேன்.

நான் தனியாக பயணம் செய்தாலும், பெங்களூரை சேர்ந்த ஜெனரல் திம்மையா நேஷனல் அகாடமி ஆப் அட்வென்சர் ஊழியரிடம் உதவி பெறுகிறேன். இவர் மூலம் கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் உதவி கிடைக்கிறது. எனக்கு வெவ்வேறு ஹோட்டல்களில் இலவசமாக தங்கவும், உணவும் வழங்கப்படுகிறது.

பெற்றோர்


சாகச பயணத்தில் எனக்கு பெற்றோரின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. இது என் அதிர்ஷ்டம். என் தந்தை, உணவு வினியோகிக்கும் பணி செய்கிறார். தாயார், பகுதி நேர ஊழியராக ஊர்க்காவல் படையில் பணியாற்றுகிறார். ஆயுர்வேத சிகிச்சை அளிக்கிறார். பெற்றோருக்கு நான் ஒரே மகளாக இருந்தும், சாகச சுற்றுலாவுக்கு என்னை ஊக்கப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் பெண்கள் தனியாக பயணிக்கும் போது, பாதுகாப்பு குறித்த பயம் ஏற்படும். இத்தகைய பயம், பெண்கள் தங்கள் கனவை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக உள்ளது. பெண் பயணியரின் பாதுகாப்பை பலப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us