பசு சாணம், கோமியத்தில் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் ஜெயஸ்ரீ
பசு சாணம், கோமியத்தில் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் ஜெயஸ்ரீ
ADDED : பிப் 02, 2026 05:14 AM

பொதுவாக பசு வளர்ப்பவர்கள், பசுக்களுக்கு வயதானாலோ, பால் வற்றி போனாலோ அவற்றை, கசாப்பு கடைக்கு அனுப்புவோர் எண்ணிக்கை அதிகம். ஆனால், பெண்ணொருவருக்கு வயதான பசுக்களே, வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. இவைகளுக்கு அப்பெண் வாழ்வளிக்கிறார்.
விஜயபுரா மாவட்டம், தாளிகோட்டே தாலுகாவின், தும்பகி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ ராமனகவுடா சவுத்ரி, 35. பி.யு.சி., வரை படித்துள்ள இவர், ஹைதராபாத்தில் வசித்த போது, ஆயுர்வேத பஞ்சகவ்ய வைத்தியர்களிடம், சிகிச்சை குறித்து பயிற்சி பெற்றுள்ளார்.
பசுக்களின் சாணம், கோமியம் உட்பட, பல்வேறு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி, மருந்துகள் தயாரிக்கவும் கற்றுக்கொண்டார்.
அங்கிருந்து திரும்பியதும், கோசாலை அமைத்தார். பசுக்களை வாங்கி வளர்க்கிறார். மாடுகளின் சாணம், கோமியத்தை பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
மூல வியாதி உட்பட, பல விதமான நோய்களை குணப்படுத்துகிறார். கசாப்பு கடைக்கு அனுப்பும் வயதான பசுக்களை, ஜெயஸ்ரீ வாங்கி வளர்க்கிறார்.
தும்பகி கிராமத்தின் பண்ணை வீட்டில் வசிக்கும் ஜெயஸ்ரீ குடும்பத்தினர், தங்களின் 20 ஏக்கர் நிலத்தில், பசுக்களின் தீவனத்துக்காக நான்கு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிஉள்ளனர்.
இங்கு மக்காச்சோளம், பசும்புல் என, பல்வேறு தீவனங்களை வளர்க்கிறார். பசுக்களின் சாணம், கோமியம் மூலமாக மாதந்தோறும் 40,000 ரூபாய் சம்பாதிக்கிறார். குடும்பத்தை நிர்வகிப்பதுடன், பணியாட்களுக்கும் ஊதியம் வழங்குகிறார்.
ஜெயஸ்ரீயால் வயதான பசுக்களுக்கு, மறுவாழ்வு கிடைக்கிறது. இவைகள் அவருக்கு வாழ்வாதாரமாக உள்ளன. இவரது வாழ்க்கை மற்ற பெண்களுக்கு, முன் மாதிரியாக உள்ளது. 'சிறு துரும்பும், பல் குத்த உதவும்' என்பது பழமொழி. அது போன்று மாட்டு சாணமும் கூட, மருந்தாக, உரமாக பயன்படுகிறது.
இது குறித்து, ஜெயஸ்ரீ கூறியதாவது:
நான் பி.யு.சி., வரை படித்துள்ளேன். என் சொந்த பணத்தில் சிறிதாக கோசாலை கட்டியுள்ளேன். திருமணத்துக்கு பின், சென்னையில் உள்ள கோசாலை ஒன்றில், 18 மாதம் ஆயுர்வேதம் பற்றி கற்றுக்கொண்டேன்.
அதன்பின் என் கோசாலையில் பசுக்களை வளர்க்க துவங்கினேன். சாணம், கோமியத்தில் இருந்து, ஆயுர்வேத மருந்து தயாரித்து சிகிச்சை அளிக்கிறேன். ஊதுவர்த்தி, கற்பூரம் பயன்படுத்தி பல் வலியை போக்கும் லிக்விட் தயாரிக்கிறேன். மூல நோய், சிறு நீரகத்தில் கல், கர்ப்பப்பை பிரச்னை உட்பட, பலவிதமான நோய்களுக்கு எங்களிடம் மருந்து உள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து, என்னை தேடி வந்து மருந்து வாங்குகின்றனர்.
குறிப்பாக கிராமங்களில் இருந்து அதிகம் வருகின்றனர். நேரில் வர முடியாதவர்களுக்கு, கூரியர்மூலமாக அனுப்புகிறேன். உற்பத்தி தயாரிப்பு செலவு, பணியாட்களின் ஊதியம் போக, 12,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தற்போது 12 பசுக்கள் உள்ளன. மருந்துகள் மட்டுமின்றி, ஊதுவர்த்தி, விபூதி, கீ பன்ச், வரட்டி என, பல்வேறு பொருட்களை தயாரிக்கிறேன். விஜயபுரா, பாகல்கோட், தாவணகெரே, மைசூரு, உடுப்பி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட, பல நகரங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

