ADDED : ஜூன் 04, 2026 11:02 PM

- நமது நிருபர் -
'சர்பிங்' எனும் அலை சறுக்கு போட்டியில், கர்நாடகாவின் பிரதீப் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார்.
தட்சிண கன்னடாவின் மங்களூரு டவுன் தண்ணீர்பாவி நீலக்கொடி கடற்கரையில், கடந்த மாதம், 30ம் தேதி தேசிய அளவிலான 'சர்பிங்' விளையாட்டு போட்டிகள் துவங்கின. கர்நாடகா, கோவா, ஒடிஷா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர் - வீராங் கனையர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உயரமான அலைகள், பலத்த காற்று போன்ற சவால்கள் இருந்த போதிலும், போட்டியில் பங்கேற்றவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
இதில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், கர்நாடகாவின் 15 வயது வீரர் பிரதீப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ராட்சத அலை எழுந்த போதிலும், அலை சறுக்கு தட்டில் வேகம், சீரான தன்மையுடன் பயணித்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரதீப், சர்பிங் சுவாமி பவுண்டேஷன் வீரராக உள்ளார். இது தான் அவரது முதல், சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்பிங் சுவாமி பவுண்டேஷன் நிர்வாகிகள் கூறுகையில், 'எங்களிடம் பயிற்சி பெற்ற பிரதீப் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது திறமையை பார்த்து வெளிநாடுகளில் இருந்து வந்த பார்வையாளர்களும் வியப்பு அடைந்தனர். சர்வதேச விளையாட்டு போட்டியிலும் பிரதீப்பை பங்கேற்க வைக்க முயற்சி எடுப்போம்' என்றனர்.
