ADDED : ஜூன் 06, 2026 11:27 PM

- நமது நிருபர் -
ஓய்வுக்கு பின் பென்ஷன், அரசு சலுகைகள் கிடைக்கும் என்பதால், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இதற்காக மற்ற வேலைகளுக்கு செல்லாமல், அரசு வேலைக்கு தேர்வாக படிப்போரை பார்த்து இருப்போம்.
ஆனால் விவசாயி ஆவதற்கு அரசு வேலையை ஒருவர் துறந்து உள்ளார். கொப்பாலின் குகனுார் தாலுகா தலக்கல் கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்தப்பா, 50. கர்நாடக அரசின் வருவாய் துறையில் ஊழியராக பணியாற்றிய இவர், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர விவசாயியாக மாறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது பெற்றோர் விவசாயிகள். அவர்களை போல விவசாயி ஆக வேண்டும் என்ற ஆசை, எனக்கும் இருந்தது. வருவாய் துறையில் எனக்கு பணி கிடைத்ததால் அரசு ஊழியர் ஆனேன்.
ஆனாலும் ஒவ்வொரு நாளும் விவசாயி ஆக வேண்டும் என்ற ஆசை, ஏக்கம் அதிகமாக இருந்தது.
பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினேன். அவர்கள் சொந்த காலில் நிற்க கற்று கொண்டதும், எனது ஆசைக்காக அரசு வேலையை ராஜினாமா செய்யும் முடிவு எடுத்தேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், வேலையை விட்டு விட்டேன். 4 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்கிறேன். தென்னை, சப்போட்டா, மா உட்பட, 200க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கிறேன். 100க்கும் மேற்பட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளேன். விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. மனதிருப்திக்காக செய்கிறேன்.
ஆண்டிற்கு, 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. விவசாயத்திற்கு செயற்கை உரங்களை பயன்படுத்துவது இல்லை. நாம் மக்களை ஏமாற்றினால், கடவுள் நம்மை ஏமாற்றி விடுவார். விவசாயத்தில் எப்படி வெற்றி பெறுவது என்று நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளேன். மோட்டார் பம்ப் செட் அறையில் அவற்றை சேகரித்து வைத்து படிக்கிறேன். மண்ணை நம்பினால் அது நம்மை எப்போதும் கைவிடாது.
இவ்வாறு அவர் கூறினார். s
