/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மரங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வேணு
/
மரங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வேணு
ADDED : பிப் 01, 2026 05:05 AM

மரங்களின் தாய் என்று அழைக்கப்பட்டவர் சாலுமரத திம்மக்கா, 114. கர்நாடகா முழுதும், 8,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டவர். கடந்த ஆண்டு நவம்பர், 14ம் தேதி மரணம் அடைந்தார்.
மரங்களை அதிகம் நட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதே, திம்மக்காவின் கடைசி மூச்சு வரையிலான ஆசையாக இருந்தது. திம்மக்காவின் பாதையை பின் தொடர்ந்து, மரங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் நபராக உள்ளார் வேணு, 35.
இவர் துமகூரின் குனிகல் டவுன் பதாஞ்சலி நகரில் வசிக்கிறார். குனிகல்லை பசுமையான நகராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வரும் வேணு, தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி, நகரின் பல இடங்களில் நட்டு வருகிறார்.
குறிப்பாக பூங்கா, அரசு பள்ளி வளாகங்களில் அதிக மரக்கன்றுகளை நட்டுள்ளார். சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட அதிகாரிகள் நினைத்தால், அதிகாரிகளை நேரில் சந்தித்து, மரங்களை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துவதுடன், பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு அழைத்து வந்து, வேரோடு மரங்களை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்று நட்டும் வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சாலை பணிக்காக, 300 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதிகாரிகளிடம் பேசிய வேணு, மரத்தை வேருடன் அகற்றி சென்று வேறு இடத்தில் நட்டு வைத்துள்ளார் .
இதுகுறித்து வேணு கூறியதாவது:
தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை மரக்கன்றுகள் வாங்க பயன்படுத்துகிறேன். பசுமையுடன் நாம் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், சாலையோரம் மரக்கன்றுகளை நடுகிறேன். எனக்கு சிலர் ஆதரவாக உள்ளனர். மரங்களை வெட்டி அகற்றக்கூடாது என்பது, எனது குறிக்கோள்.
வேரோடு அகற்றி சென்று வேறு இடத்தில் நட்டு வளர்க்கலாம். வளர்ச்சிப் பணி செய்வது தவறில்லை. அதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்று நினைப்பது தவறு.
வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்தும் மரங்களை பாதுகாப்பதற்கு பணியாற்றியுள்ளேன். துமகூரு மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களுக்கும் சென்று மரக்கன்றுகளை நடுகிறேன்.
மரங்களை வெட்டி அகற்றாமல் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவி செய்யவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்
--நமது நிருபர் -- .

