சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகாலிங்கா
சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகாலிங்கா
ADDED : ஜூன் 06, 2026 11:28 PM

-நமது நிருபர் -
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கை வளங்களை பேணி பாதுகாக்கவும், மனிதர்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கவும் மேற்கொள்ளப்படும் அவசியமான நடவடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், வாலிபர் ஒருவர் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். துமகூரை டவுனை சேர்ந்தவர் மகாலிங்கா, 29. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கர்நாடகாவின் 31 மாவட்டங்களுக்கும், சைக்கிளில் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி, கடந்த மாதம் 2ம் தேதி துமகூரில் இருந்து, சைக்கிள் பயணத்தை துவக்கினார். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் முடித்து விட்டு, சில தினங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார்.
இதுகுறித்து மகாலிங்கா கூறுகையில்:
மாநிலத்தின், 31 மாவட்ட கலெக்டர்களையும் சந்தித்து, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஐந்து முதல் பத்து ஏக்கரில் சிறிய வனப்பகுதி, பறவைகள் சரணாலயம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்து உள்ளனர். கடந்த 2021ல் 31 மாவட்டங்களும் சைக்கிளில் சென்று, அரசு பள்ளி வளாகங்களில் மரம் நடும் பிரசாரத்தை துவக்கி வைத்தேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நோட்டீஸ்களை அச்சடித்து வழங்கினேன்.
அப்போது, 5,500 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்தேன். அந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக, எனது பிரசாரத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. ஆனாலும், பல பள்ளி குழந்தைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று எனக்கு உறுதி அளித்தனர். அது எனக்கு மனநிறைவு தந்தது.
வெயில் காரணமாக தற்போது ஒரு நாளைக்கு 50 கி.மீ., மட்டுமே சைக்கிள் ஓட்ட முடிகிறது. இரவில் பெட்ரோல் பங்க், பள்ளி, கோவில்களில் தங்குகிறேன். பணம், சொத்து எளிதில் சம்பாதிக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல், ஆரோக்கியத்தை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம். இதை நாம் யாரும் மறந்து விட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாலிங்காவின் சைக்கிளில் தேசிய, கன்னட கொடிகள், புனித் ராஜ்குமார் நடித்த கந்ததகுடி படத்தின் போஸ்டர், ஒரு கூடை இடம் பெற்று உள்ளது.
