கைதிகளின் கைவண்ணத்தால் புது வடிவம் பெற்ற மங்களூரு சிறை
கைதிகளின் கைவண்ணத்தால் புது வடிவம் பெற்ற மங்களூரு சிறை
ADDED : ஜூலை 04, 2026 11:17 PM

- நமது நிருபர் -
விதி வசத்தால் குற்றவாளிகளாகி, சிறைக்கு வரும் கைதிகளை நல்வழிப்படுத்தி, திருந்திய மனிதர்களாக மாற்றி வெளி உலகுக்கு அனுப்பும் உன்னதமான பணியை செய்வது சிறைகளின் கடமையாகும். சில சிறைகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் மங்களூரு சிறையும் ஒன்றாகும்.
இங்கு கைதிகளிடம் உள்ள திறமைகளை, அடையாளம் கண்டு சிறை அதிகாரிகள் ஊக்கப்படுத்துகின்றனர். தற்போது மங்களூ ரு மத்திய சிறையின் சுவர்கள், வெறும் சிமென்ட், செங்கல் கட்டடம் அல்ல. கலை வடிவங்களாக மாறியுள்ளன.
காசர்கோடு கைதி காசர்கோடுவை சேர்ந்த சுதீந்திரன் என்பவர், செட்டில்மென்ட் வழக்கு தொடர்பாக கைதாகி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மங்களூரு மத்திய சிறைக்கு வந்தார். ஓவிய கலையில் மூன்று ஆண்டு பயிற்சி பெற்றுள்ள இவர், சிறைக்கு வருவதற்கு முன், சிறார்களுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்தார்.
சிறைக்குள் வந்த போது, இவருக்குள் இருந்த ஓவியத்திறனை, சிறை அதிகாரி சரண பசப்பா தெரிந்து கொண்டார். சிறையின் சுவர்களில் ஓவியம் வரைய முடிவு செய்தார். சிறை நிர்வாகமே வண்ணங்கள், துாரிகை உட்பட தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது. சுதீந்திரன் தினமும் காலை, மாலையில் சுவர்களில் ஓவியம் தீட்டுகிறார். இவருக்கு ஓவியத்திறன் உள்ள இரண்டு கைதிகள் உதவுகின்றனர்.
கிராமிய கலை இதற்கு முன் உயிரற்று காணப்பட்ட சிறையின் சுவர்கள், இன்று தேசபக்தியை விவரிக்கின்றன. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் உட்பட பல்வேறு தேசத் தலைவர்கள், கடலோர மாவட்டத்தின் கலாசாரத்தை விவரிக்கும் ஓவியங்கள், கிராமிய கலைகள் ஓவியமாக உயிர் பெற்றுள்ளன.
இவர்களின் கை வண்ணத்தால், சிறையின் ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு கதை சொல்லும், கலை அருங்காட்சியாக மாறுகின்றன. வரும் நாட்களில் யக்ஷகானா, புலி வேஷம், கம்பாலா, அப்துல் கலாம் ஓவியங்களை வரைய கைதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, சிறை அதிகாரி சரண பசப்பா கூறியதாவது:
மாறிய வடிவம் சிறை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. கைதிகளின் மனதை மாற்றி, அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை வெளியே கொண்டு வந்து, அவரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் இடமாகும்.
இதை மனதில் கொண்டே, கைதிகளுக்கு ஓவியம் வரைய வாய்ப்பளித்துள்ளோம். இவர்களால் சிறை வடிவமே மாறியுள்ளது.
வரும் நாட்களில், மாநில திறன் மேம்பாட்டு ஆணையம், தர்மஸ்தலாவின் ரூட்செட் அமைப்பின் ஒருங்கிணைப்பில், கைதிகளுக்கு கண்காணிப்பு கேமரா பழுது பார்ப்பது, பாஸ்ட் புட் தயாரிப்பது உட்பட பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் அவர்கள் விடுதலையாகி, வெளியே செல்லும் போது சமுதாயத்தில் யாரையும் சார்ந்திராமல், வாழ்க்கையை அமைத்து கொள்ள, உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
