ADDED : ஜூலை 25, 2026 11:27 PM

- நமது நிருபர் -
தாவணகெரே மாவட்டம், ஜகலுார் தாலுகாவில் சிக்கமல்லனஹொலே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால், கிராமத்தினர் சிரமப்பட்டனர்.
மழை காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சேறும், சகதியும் நிறைந்த பாதையில் பயணித்து சலிப்படைந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இதனால், விரக்தியடைந்த கிராமத்தினர், தாங்களே சாலை போட திட்டமிட்டனர். இதற்காக ஊர் மக்களிடம் பணத்தை வசூல் செய்தனர். ஒவ்வொருவரிடம் 100 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டது.
சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது. டிராக்டர், பொக்லைன், ரோடு ரோலர் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்தனர்.
செம்மண், கற்களை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டது. 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைத்தனர். இதற்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானது. தற்போது வாகனங்கள் செல்லும் வகையில் கிராமத்தில் அழகான சாலை உள்ளது.
இது குறித்து, கிராமத்தினர் கூறியதாவது :
குண்டும், குழியுமான சேறும் சகதியும் நிறைந்த பாதையில் தினமும் பயணிக்க வேண்டியிருந்தது.
சாலை அமைத்து தரக்கோரி, பா.ஜ., -காங்., என இரு கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., என பலரிடமும் மனுக்கள் அளிக்
கப்பட்டன. நடவடிக்கைஎதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், நாங்களே களத்தில் இறங்கினோம்.
கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சிறு தொகை வசூலிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் கூட, தங்களால் இயன்ற தொகையை தந்தனர்.
இந்த சாலையின் வழியே பயணித்தால் விஜயநகர் மாவட்டத்தை எளிதில் அடையலாம். 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்க 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானது.
தற்போது, கிராமத்தினர் அனைவரும் நிம்மதியாக உள்ளனர். மாநில அரசை நம்பாமல் நாங்களே களத்தில் இறங்கியதால் மட்டுமே தீர்வு கிடைத்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
