UPDATED : ஜூலை 26, 2026 11:15 AM
ADDED : ஜூலை 17, 2026 07:43 PM

இயற்கை நமக்கு பல்வேறு அரிய பொக்கிஷங்களை வழங்கியுள்ளது. அதுகுறித்த நம் முன்னோர்கள் அவற்றின் மூலம் நோய்களை அண்ட விடாமல் ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
ஆனால், இன்று இயற்கையை அழித்து நோய்களும், அவற்றை குணப்படுத்துவதற்கான வழி முறைகளையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான்.
கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் துாள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை துாள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
*வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
* அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.
* கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
* ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.
* பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
