உட்காரும் இடத்தில் கட்டி? இதைத் தெரிந்துகொண்டால் கவலைப்படவேண்டாம்
உட்காரும் இடத்தில் கட்டி? இதைத் தெரிந்துகொண்டால் கவலைப்படவேண்டாம்
UPDATED : ஜூலை 09, 2022 04:37 PM
ADDED : ஜூலை 09, 2022 04:35 PM

நம்மில் பலர் அடிக்கடி சந்திக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது பிட்டப் பகுதியில் உண்டாகும் சீழ் கொப்புளங்கள். இவை சில சமயங்களில் சிறிதாகவும், சில சமயங்களில் பெரிதாகவும் காணப்படும். இது எதனால் உண்டாகிறது, இதற்கான சிகிச்சைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?
கொப்புளங்கள் ஏன் உண்டாகின்றன?

பிட்டப் பகுதியில் கொப்புளங்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது தோலின் மேல்பரப்பில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் சில சமயங்களில் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி இதனால் சிறி கட்டி, கொப்புளங்கள் தோன்றி மறையலாம். பெரிய கொப்புளங்களை கவனிக்காமல் விட்டால் சில சமயங்களில் இவற்றில் சீழ் பிடிக்க வாய்ப்புண்டு.
இது தவிர சுகாதாரமின்மை, நீரிழிவு தாக்கம் காரணமாகவும் பிட்டப் பகுதி மற்றும் இதர மறைவு பாகங்களில் கட்டி ஏற்படலாம்.
துவைக்காத உள் ஆடைகளை பல நாட்கள் தொடர்ந்து அணிவது இதற்கு ஓர் முக்கிய காரணி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அப்போது அடிக்கடி வெயிலில் சூடான இடங்களில் அமருபவர்களுக்கு சூட்டு கொப்புளங்கள் உண்டாகலாம்.
தீர்வு என்ன?

இந்த கட்டிகள் அடிக்கடி பிட்டத்தில் ஏற்பட்டால் இதனைச் சுற்றி வலி, எரிச்சல், வீக்கம் உண்டாகும். இதற்கு தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
எப்போதாவது ஏற்பட்டால் இதற்கு நாம் வீட்டில் கைவைத்தியம் செய்வோம். இது தவறு. கட்டி உருவான இடத்தில் மஞ்சள், பெருங்காயம் தாவுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவரின் பரிந்துரைப்படி தற்கான ஆயின்மெண்ட்களை தடவுவது நல்லது.
அதீத அமிலத்தன்மை கொண்ட சோப்களை பயன்படுத்தக்கூடாது. இது தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நீக்கி பாதுகாப்பு கவசத்தை முழுவதுமாக அழித்துவிடும்.
