சிறகடித்து பறக்கிறார்கள் கலர் கலராக பறவைகளை பார்க்க!
சிறகடித்து பறக்கிறார்கள் கலர் கலராக பறவைகளை பார்க்க!
UPDATED : ஆக 30, 2026 07:57 AM
ADDED : ஆக 29, 2026 02:00 PM

“இந்த வீக் எண்ட்ல எங்க போகலாம்?” என்று போனை தடவும் பல கோவைவாசிகளில் நீங்களும் ஒருவர் என்றால், பறவைகளை பார்க்க வாங்க என்று அழைக்கிறார்கள், இயற்கை ஆர்வலர்கள்.
கோவை இயற்கை சங்கத்தின் நிறுவனர் செல்வராஜ் தலைமையில், 2012 முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் பறவை ஆர்வலர்களுடன் Bird Watching பயணம் களைகட்டுகிறது.
ஆனைக்கட்டி மலைப்பகுதி, ஏரிகள், குளங்கள், நீர்நிலைகளுக்கு கையில் பைனாக்குலர்களுடன் கிளம்பி விடுகின்றனர் இக்குழுவினர்.
அரிய பறவைகளை பதிவு செய்து, ஆய்வு செய்து, இணையதளங்களில் பதிவேற்றியுள்ள செல்வராஜ், இரண்டு பதிப்புகளாக புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
2015-ல் 320 வகை பறவைகள், 2021-ல் 430 வகை பறவைகள் என பதிவுகள் அதிகரித்துள்ளன.
இந்த பயணத்தில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமே இல்லாமல் பலரும் உண்டு.
“ஒருபக்கம் ஹாபி என்றால், இன்னொரு பக்கம் புதிதாக கற்கும் வாய்ப்பு இது. நம்மைச் சுற்றி இவ்வளவு பறவைகள் இருக்கிறதா என்று அறியும் போது ஆச்சரியமாக இருக்கும்...வாங்க எங்ககூட ஒருநாள்” என அழைக்கிறார் செல்வராஜ்.
பறவைகள் மட்டுமல்லாமல் வண்ணத்துப்பூச்சிகளின் பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர்.
அரிய படங்களை சுட்டுத்தள்ள, தொழில்முறை புகைப்படக்கலைஞர்களும் இவர்களுடன் கலந்து கொள்ள, களைகட்டுகின்றன ஞாயிறு பயணங்கள்!
தொடர்புக்கு: 98422 61279.
''பறவைகள் இனப்பெருக்கத்துக்காக மட்டும் இடம் மாறுவதில்லை. பருவநிலை மாற்றம், தங்களுக்கு ஏற்ற சூழல் ஆகியவையும் இடப்பெயர்வுக்கு முக்கிய காரணம்” -செல்வராஜ், கோவை இயற்கை சங்கம்
