/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா பயணியரை கவரும் மஹாராஜா பயணித்த ரயில்
/
சுற்றுலா பயணியரை கவரும் மஹாராஜா பயணித்த ரயில்
ADDED : பிப் 19, 2026 07:13 AM

'ஆடு தொடாத இலை இல்லை. மைசூரு மஹாராஜாக்கள் செய்யாத வளர்ச்சி பணிகளே இல்லை' என்ற பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மைசூருக்கு மஹாராஜாக்கள் செய்தது ஏராளம். மைசூரு மஹாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையாளர், அவரது மகன் சாமராஜேந்திர உடையார் பயன்படுத்திய சொகுசு ரயில், மைசூரு ரயில்வே அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
நீராவி இன்ஜின், ஒரு பெட்டியுடன் கூடிய சொகுசு ரயிலை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மைசூரில் இருந்து பெங்களூரு, மஹாராஷ்டிரா, கோவா செல்ல இந்த ரயில் பெட்டியை தான் பயன்படுத்தி உள்ளார்.
தற்போது 'மஹாராணி சலுான் கோச்' என்று பெயரிடப்பட்டுள்ள ரயில் பெட்டியில் படுக்கை அறை, புத்தகம் வாசிப்பு அறை, சமையல் அறை, குளியல் அறை உள்ளது.
மஹாராஜாக்கள் ரயில் பயணம் எப்படி இருந்தது என்பதை காட்டும் வகையில், இந்த ரயில் பெட்டி அமைந்து உள்ளது.
இந்த ரயில் பயன்பாட்டில் இருந்த போது அகல, குறுகிய ரயில் பாதையில் இயங்கும் திறன் கொண்டதாக இருந்தது.
கடந்த, 1979ம் ஆண்டு இந்திய ரயில்வே மைசூரில் அருங்காட்சியகம் கட்டிய போது, மன்னர் குடும்பத்தின் சார்பில் ரயில் இன்ஜினும், ரயில் பெட்டியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் பெட்டி 1899ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 127 ஆண்டுகள் ஆனாலும் அதன் கட்டமைப்பு இன்னும் வலுவாக இருப்பது சிறப்பு.
செவ்வாய்க்கிழமையை தவிர வா ரத்தில் ஆறு நாட்களும் அருங்காட்சியகம் திறந்து இருக்கும். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, சுற்றுலா பயணியருக்கு அனுமதி உண்டு. பெரியவர்களுக்கு 50 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- நமது நிருபர் -

