PUBLISHED ON : மார் 16, 2025

செய்தி: இந்திய கடற்படை துப்பாக்கி சூட்டில் மீனவர் படுகாயம்! அநீதி: கண்டுகொள்ளாத அரசால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் குடும்பம்!
அரசே... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வாணகிரி மீனவர் வீரவேலின் மனைவி மதுமதி நான்!
நீங்கள் கொடுக்கச் சொன்னதாக இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தை நேரில் வந்து வழங்கிய உங்களது அமைச்சர்களுக்கு நானும், எனது குடும்ப சூழலும் நன்கு பரிச்சயம்!
அக்டோபர் 15, 2022ல் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற என் கணவரை, 21ம்தேதி அதிகாலை இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இடது தொடை மற்றும் வயிற்றில் பெரும் காயம். துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்திய கடற்படை!
சிகிச்சை முடிந்து நவம்பர் 12, 2022ல் ஊர் திரும்பி விட்டோம் என்றாலும், மீன்பிடி தொழில் செய்ய அவர் உடல்நலன் இன்றுவரை ஒத்துழைக்கவில்லை. பட்டதாரியான எனக்கு வேலைவாய்ப்பு கேட்டு மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே தேய்ந்து விட்டேன்.
'மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது' என்று சம்பவ தருணத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதினீர்களே... வாழ்வாதாரத்திற்கு வழியின்றி இரு பிஞ்சு குழந்தைகளுடன் நான் தவிப்பது அறிந்தும் உங்கள் அரசு அலட்சியமாக இருப்பது, மீனவர்கள் மத்தியில் நம்பிக்கை விதைக்கும் என்று நம்புகிறீர்களா?
எனக்கு நீதி மறுக்கப்படுகிறதா அரசே?