PUBLISHED ON : பிப் 22, 2026

செய்தி: பட்டாசு குடோன் சிதறி பெரும் விபத்து; உடல் சிதைந்து தொழிலாளி பலி!
அநீதி: முதல்வர் பொது நிவாரண நிதிக்காக நான்கு ஆண்டுகளாக தவிக்கும் மனைவி!
முதல்வரே... 'ரூ.5, 000 தமிழகத்தில் எத்தனை பெண்களுக்கு சந்தோஷம் தந்திருக்கிறது' என்ற புள்ளிவிபரம் வைத்திருக்கும் நீங்கள், பிப்ரவரி 21, 2025ல் கடலுார், மஞ்சக்குப்பத்தில் நான் தந்த மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன?
கடலுார், அங்குசெட்டிப்பாளையத்தில் வசிக்கும் நான் 66 வயது ரத்தினாம்பாள். மார்ச் 14, 2022ல் கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் கிராமத்தில், உரிமம் புதுப்பிக்கப்படாத பட்டாசு கிடங்கு விபத்தில் உடல் சிதறி பலியாகி விட்டார் என் கணவர் ஏழுமலை.
இதுதொடர்பாய் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை எண்:149/2022. கிடங்கு உரிமையாளர்கள் இழப்பீடு வழங்கவில்லை. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எனக்கு 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி' வேண்டி, ஜூன், 2022ல் உங்கள் தனிப்பிரிவிற்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்திருந்தேன்.
'TN - 72002205171179 எண் கொண்ட வாரிசு சான்றிதழ் அடிப்படையில் நி தியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கலாம்' என்று மே, 2023ல் வருவாய் கோட்டாட்சியர் சொல்லியும், இப்போது வரை ஆட்சியரிடமிருந்து பலனில்லை!
'மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்' என சொல்கிறீர்களே முதல்வரே... எனது மனுவிற்கான விடியல் எப்போது?

