நாங்க என்ன சொல்றோம்னா...: கப்புள் ப்ரெண்ட்லி (தெலுங்கு/தமிழ்)
நாங்க என்ன சொல்றோம்னா...: கப்புள் ப்ரெண்ட்லி (தெலுங்கு/தமிழ்)
PUBLISHED ON : பிப் 22, 2026

காதலர் தினத்தன்று மலர்ந்து இன்னும் உதிராத ரோஜா
'பரஸ்பர ஈர்ப்பு என்கிற சாதாரண நிலையில் துவங்கும் காதல், 'நிபந்தனையற்ற அன்பு' என்கிற உன்னத நிலையை அடைய காதலர்கள் எத்தகைய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்' என்பதைச் சொல்லும் கதை!
'காதலுக்கு கண் இல்லை; மூக்கு இல்லை' என்ற வியாக்கியானம் பேசாமல், 'காதலுக்காக நீ எவ்வளவு துாரம் செல்வாய்' என்கிற கேள்வியை மித்ரா வழியே சிவாவிடம் கேட்கிறது காதல். அவளது அன்பை வாங்கி பருகத் தெரிந்தவனுக்கு தன் அன்பை பரிமாறத் தெரியாதபோது, காதலுக்கு 'செக்மேட்' வைக்கிறது காலம்!
இதற்கிடையே, வீட்டில் கூடு கட்டி வாழும் பறவைகள், கேரளத்து படகு சவாரி காட்சிகள் உள்ளிட்டவை மித்ரா - சிவா காதலுக்கு பல்லக்குத் துாக்குவது அழகு. இருவருக்குமான அறிமுக சந்திப்பு வளர்ந்து காதலாகும் விதத்தை நம்பகத் தன்மையோடு வழங்கியது இயக்குனர் அஸ்வின் சந்திரசேகரின் பலம். முத்தங்கள் பேசும் முதல் பாதியும், மவுனம் பேசும் இரண்டாம் பாதியும் தராசு முள்ளினை நடுநிலையில் நிறுத்துகின்றன!
பெரும்பாலான கணவர்கள் மனைவியை நேசிப்பவர்கள் தான்; ஆனால், அந்நேசம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தருணங்களில் 'சைலன்ட் மோடு'க்கு செல்வதே பிரச்னை; இப்படியான குடும்ப பஞ்சாயத்துக்கும் தீர்வு சொல்கிறது திரைக்கதை!
நடுத்தர குடும்பங்களில் இருந்து வரும் நவீன யுவதியாக நாயகி மானசா வாரணாசி; இவரே, கதையின் ஆன்மா. உதடுக்குள் புகையிலை மறைக்கும் இளைஞன் சிவாவாக சந்தோஷ் சோபன்; நடிப்பில் ஈர்த்தாலும் இவரது ஒழுங்கீன வாழ்க்கையை விமர்சிக்காத திரைக்கதை ஏமாற்றம்!
'காதல் உங்கள் வாழ்க்கையை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம்' என்கிறது கதையின் போக்கு. இதை எச்சரிக்கையாக பார்ப்பதும், அனுபவமாக பார்ப்பதும் அவரவர் மனநிலை சார்ந்தது.
ஆக...
'வாழ்க்கை - எளிதில் உடையக்கூடியது; கவனமாக கையாளவும்' என்கிறார் இயக்குனர்

