PUBLISHED ON : பிப் 22, 2026

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில். ராஜேந்திர சோழனின் மகள்வழி பேரன் ஒருவன், தான் ஈட்டிய வெற்றிக்காக கட்டிய கோவில் இது. இதன் திருச்சுற்று சுவர்களில் அணி செய்யும் ராமாயண கதை மற்றும் நடன அடவு சிற்பங்கள் சோழர்கால கலைத்திறனுக்கு மிகச்சிறந்த சான்று!
இவற்றில் ஒன்றாய்... வடக்கு சுற்றுச்சுவரில் மூன்று வளர்ந்த யானைகளும், உற்றுப்பார்த்தால் தெரியும் யானைக்குட்டி ஒன்றுமாய் மேற் சொன்ன கஜ பிரசவம்!
பிரசவ வேதனையில் பெண் யானை ஒன்று, வெளிவரும் தன் குட்டி தரையில் விழுந்து காயமுறாமல் தப்பிக்க, தன் முன்னங்கால்களை வலுவாக ஊன்றி, பின்னுடலை தரை தாழ்த்தி, காதுகள் விடைக்க, தலை துாக்கி, துதிக்கை உயர்த்தி பிளிறி துடிக்கிறது. பிரசவிக்கும் யானையின் வால் ஒதுக்கி உதவுகிறது மற்றொரு பெண் யானை.
துதிக்கை, தலை, முன்னங்கால்கள் என தாயிடம் இருந்து பிரிந்து மெல்ல மெல்ல வருகிறது குட்டி. இத்தோடு இச்சிற்பம் நிறைவுற்றிருந்தால் இது சராசரி சிற்பமே; ஆனால், அருகில் கலங்கி நிற்கும் ஆண் யானையின் காதல் வழியாக தன் படைப்பை காவியமாக்கி இருக்கிறான் சோழ சிற்பி.
பெண் யானையின் பக்கவாட்டில் நின்று தன் துதிக்கையால் அதன் வயிறு தடவி ஆசுவாசப்படுத்துகிறது ஆண் யானை.
ஐந்தறிவு உயிர்களின் காதலை ஆறறிவு சிலிர்க்கும் வண்ணம் படைத்திருக்கும் சிற்பியை 'கடவுளின் உளி' என்றால் மறுப்பீர்களா?

