ADDED : டிச 13, 2024 08:09 PM

''சிறகை உலர்த்தும் சிட்டுக்குருவி, ரீங்காரமிடும் தேன்சிட்டு, கண் சிமிட்டும் கருங்குயில், நீல மேனியில் மின்னும் செம்போத்து என, பறவைகளுடன் பறந்த நாட்கள் தான் அதிகம். இவை இனப்பெருக்க காலத்தில், தன் முட்டைகளை அடைகாக்கும் நுட்பத்தை பார்த்திருக்கிறேன். என் வீட்டில் வளர்த்த செல்லப் பறவைகளுக்கு, இனப்பெருக்க காலத்தில் அடைகாப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, பலகட்ட ஆய்வுகளுக்கு பின், இக்கூண்டு தயாரித்தேன். இதற்கு ஆதரவு பெருகியதால், முழு நேர வேலையாக்கி கொண்டேன்,'' என்கிறார், கோவையை சேர்ந்த, 'குக்கூ பெட்ஸ்' நிறுவனர் முகமது முன்சர்.
பறவைகளுக்கு இனப்பெருக்க கூண்டு தேவையா என்றதும், தனது அனுபவங்களை பகிர்ந்தார்.
பொதுவாக பறவைகள், இனப்பெருக்க காலத்திற்கு தகுந்த, சீதோஷ்ண நிலை கொண்ட இடத்தை தேடி பறப்பதும், பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டு அடை காத்து, குஞ்சு பொறித்து, இரை தேடி வந்து கொடுப்பதும், சிறகு முளைத்து பறந்த பிறகு, தனியே விட்டு செல்வதும் வழக்கம். இது, பறவைகளுக்கான அடிப்படை குணாதிசயம்.
வெளிநாட்டு பறவைகளை பழக்கப்படுத்தி, செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் போது, இனப்பெருக்க காலத்தில், அடைகாக்கும் சூழலை ஏற்படுத்தி தருவது அவசியம். இதற்காக பறவைகளின் கூண்டில், மண்பானையை சிலர் வைப்பர். இதன் அடிப்பகுதியில் வளைவாக இருப்பதோடு, குளிர்காலத்தில் முட்டையில் இருந்து வாரிசு வெளிவர போதிய வெப்பம் கிடைக்காது. இதற்கு தீர்வு தேடியதால் உருவானதே, 'குக்கூ பெட்ஸ்' நிறுவனம்.
பறவைகளுக்கு பழங்களின் வாசனை மிகவும் பிடிக்கும் என்பதால், மாமரம் அதிகம் பயன்படுத்துவேன். இதுதவிர, இறக்குமதி செய்யப்பட்ட, வாட்டர் ப்ரூப் கொண்ட பிளைவுட், வாடிக்கையாளர்கள் விரும்பும் மர வகையிலும், கூண்டு தயாரிக்கிறேன். இனப்பெருக்க கூண்டை பொறுத்தவரை, முட்டையிட்டு, அடைகாக்க தகுந்த அளவில் தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு, ஒவ்வொரு பறவைக்கும் மாறுபடும்.
வழக்கமான கூண்டில், பறவை இனப்பெருக்க காலத்திற்கு முன்பு, இந்த அடைகாக்கும் கூண்டு வைத்தால் போதும். அது முட்டையிட்டு, வாரிசுகள் வெளிவந்ததும், கூண்டை எடுத்துவிடலாம். பறவைகள் தவிர, மர்மோசெட் குரங்கு, முயல், அணிலுக்கும் இனப்பெருக்க கூண்டு இருக்கிறது.
இக்வானா, பால் பைத்தான் இன பாம்புக்கு ஓய்வெடுக்க கூண்டு உண்டு. இதில், வார்னிஷ், பெயிண்ட் அடிக்காததால், கடித்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
உங்கள் வீட்டின் முன் உள்ள, தோட்டப்பகுதியில் அடிக்கடி குருவிகள் வருமானால், அங்கு இக்கூண்டை வையுங்கள். அவை இனப்பெருக்க காலம் வரை, உங்கள் அன்பின் கதகதப்பில் வாழும்.
இதன் விலை, ரூ.70 முதல் உள்ளது. கூண்டின் அளவுக்கேற்ப விலை மாறுபடும்.
தொடர்புக்கு 8870003170.

