ADDED : பிப் 07, 2026 08:19 AM

அசைவம் சாப்பிடாதவர்களின் செல்லங்களுக்காக தினசரி உணவு சமைத்து தருகிறார், கோவை, செல்வபுரத்தை சேர்ந்த தாரணிபிரியா.
இந்த ஐடியா எப்படி வந்தது என அவரே கூறுகிறார்:
நான் படித்தது பிளஸ் 2 வரை தான். திருமணத்திற்கு பிறகு, ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்ற உந்துதல் இருந்தது. சமையலில் ஆர்வம் அதிகம். ஆனால், ஓட்டல், தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு பெரும் முதலீடு, உழைப்பு தேவை. எனக்கு ஒன்றரை வயதில் மகன் இருப்பதால், வீட்டில் இருந்தபடியே சமைத்து தர முடிவெடுத்தேன்.
எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளை பிரியம். அவைகளுக்கு சமைத்து தரலாமே என்ற எண்ணம் வந்தது. ஆனால், யாரை, எப்படி அணுகுவது என தெரியவில்லை. தெரிந்தவர்கள், நட்பு வட்டாரத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள், தங்களின் செல்லப்பிராணிகளுக்காக இறைச்சி கடைகளுக்கு சென்று, சிக்கன், மட்டன் வாங்கி தருவதை அறிந்தேன். அவர்கள் தான் என் 'டார்கெட் ஆடியன்ஸ்' என முடிவெடுத்தேன்.
சமைக்காத இறைச்சி, சமைத்த இறைச்சி, சோறுடன் இறைச்சி என எந்த மெனுவாக இருந்தாலும், தயார் செய்து தருகிறேன். செல்லப்பிராணிகளின் உணவில், புரோட்டீன் அதிகம் இருக்க வேண்டும். உப்பு, மசாலா பொருட்கள் சேர்க்கக்கூடாது. காய்கறி, கீரைகள், முட்டை சேர்க்கலாம்.
நான் தயாரித்து தரும் உணவை, பப்பி விரும்பி சாப்பிடுவதாக பலரும் கூறியுள்ளனர். செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்திற்காக ஆர்டர் செய்து வாங்கி தருவோர் அதிகரித்து வருகின்றனர். இதை, வீட்டிலிருக்கும் பெண்களும், பிசினஸாக முயற்சிக்கலாம், என்றார்.

