ADDED : மார் 21, 2026 01:37 AM

''அடுக்குமாடி குடியிருப்புகளில், குறைந்த இடப்பரப்பில் செல்லப்பிராணி வளர்க்க பலரும் பூனையை தேர்வு செய்கின்றனர்,'' என்கிறார், மும்பை, 'இண்டியன் கேட் கிளப்' பொது செயலாளர் யாசர்ஜாப்ரி.
'செல்லமே' பக்கத்திற்காக அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
உங்களை பற்றி
பொறியியல் பட்டதாரியான நான், ஐதராபாத்தில் வசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே பூனைகள் மீது அலாதி பிரியம். என் முதல் பூனை 'கோரு'; கண்காட்சியில் சிறப்பு பரிசு வென்றது. அது, நாட்டு இன பூனை.அதிலிருந்தே ஆரோக்கியமான பூனை வளர்ப்பு குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். இதை பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் நோக்கில் தான், கிளப் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்கிறோம்.
உங்கள் கிளப்பின் செயல்பாடுகள் என்ன?
பூனைகளின் ஆரோக்கியம், வளர்ப்பு முறை, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து, அதன் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுகிறோம். பூனை இனப்பெருக்கத்தில், ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவது குறித்து பயிலரங்குகள், கருத்தரங்குகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பூனையின் இனம், அதன் பெற்றோர் குறித்த தகவல்களை கிளப்பில் பதிவு செய்கிறோம். சிறந்த ப்ரீடர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். மைக்ரோசிப் பொருத்துகிறோம். இந்தியாவில் உள்ள பூனைகளின் தரம் குறித்து, உலகநாடுகள் அறிய கண்காட்சிகள் நடத்துகிறோம். இதன் வாயிலாக, நிறைய பூனை வளர்ப்பாளர்களை ஒருங்கிணைத்துள்ளோம்.
தடுப்பூசி, கருத்தடை குறித்த விழிப்புணர்வு பற்றி...
உண்மையை கூற வேண்டுமென்றால், பூனைகளுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. நகம் வெட்டுவது, காது சுத்தம் செய்வது, முடி பராமரிப்பு பற்றி கூட அடிப்படை புரிதல் பலருக்கும் இல்லை. இங்கே நிறைய கால்நடை மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனால், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியம் கு றித்த விஷயங்களில், பின்தங்கியே இருக்கிறோம். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 'இண்டியன் கேட் கிளப்' தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
நாய் விட பூனை வளர்ப்பவர்கள் குறைவாக இருக்கிறார்களே ஏன்?
பொதுவாக அப்படியொரு பிம்பம் இருக்கிறது. ஆனால், நாய் போலவே நீண்டகாலமாக பூனை வளர்ப்பவர்களும் உள்ளனர். அதிலும் சமீபகாலமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், குறைந்த இடப்பரப்பில் வளர்க்க ஏற்ற செல்லப்பிராணியாக பூனையை பலரும் தேர்வு செய்கின்றனர். மெட்ரோ நகரில், பூனை வளர்ப்பவர்கள் விகிதம் அதிகரித்துள்ளது.
நாட்டுப்பூனைகளை, பலரும் விரும்பி வளர்க்கின்றனர். வெளிநாட்டு இனங்களில், பெர்ஷியன், பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர், பெங்கால், மெய்ன்கூன்பூனைகளைதேடி வாங்குகின்றனர்.
ஆரோக்கியமான பூனையை வாங்குவது எப்படி?
பூனையின் பெற்றோர், அதற்கு மரபு ரீதியான நோய்கள் ஏதேனும் இருக்கிறதா, அந்த ப்ரீடருக்கு இத்துறையில் இருக்கும் அனுபவம் குறித்து முதலில் விசாரிக்க வேண்டும். பூனையின் கண்கள், காது, தோலில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என பார்க்க வேண்டும். சான்றிதழ் வைத்திருக்கும் பட்சத்தில், தயக்கமின்றி வாங்கலாம். இதன் பின் முறையாக தடுப்பூசி போடுவது, சத்துள்ள உணவு கொடுப்பது, பராமரிப்பது அவசியம்.

