விண்வெளி நோக்கிய விழிப்புணர்வு பயணம்: மாணவர் கனவுக்கு சிறகு விரிக்கும் 'இஸ்ரோ'
விண்வெளி நோக்கிய விழிப்புணர்வு பயணம்: மாணவர் கனவுக்கு சிறகு விரிக்கும் 'இஸ்ரோ'
UPDATED : ஜூலை 05, 2026 08:48 AM
ADDED : ஜூலை 04, 2026 05:31 PM

விண்வெளி அறிவியலும் தொழில்நுட்பமும் எட்டாக்கனியான ஒன்றல்ல; அரசுப் பள்ளி மாணவர்களின் வீட்டு வாசலுக்கே வந்து சேரக்கூடிய எளிய அறிவியல் என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் நிரூபித்து வருகிறது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே விண்வெளி குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது புதிய முயற்சியாக 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' என்ற நடமாடும் விண்வெளிக் கண்காட்சி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
![]() |
இந்த வாகனம் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று, மாணவர்கள் விண்வெளி உலகை நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்குகிறது. மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஐந்து வகை ராக்கெட் மாதிரிகள், பத்து வகையான செயற்கைக்கோள் மாதிரிகள், மங்கள்யான், சந்திரயான்-1, 2, 3 மற்றும் ஆதித்யா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகள் எவ்வாறு ஏவப்படுகின்றன, அவை எந்த நோக்கங்களுக்காக விண்ணில் செலுத்தப்படுகின்றன என்பதையும் எளிமையாக விளக்குகின்றனர்.
சமீபத்தில் திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய நுாலக அதிகாரி குமார் பங்கேற்று, இஸ்ரோவில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
![]() |
அவர் கூறியதாவது:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் படிப்பை முடித்தவர்கள் நேரடியாக இஸ்ரோவில் சேர முடியும். பி.டெக். பட்டதாரிகள், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மைய ஆட்சேர்ப்பு வாரியத் தேர்வு மூலம் விஞ்ஞானிகளாக பணியில் சேரலாம். டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர், ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு டெக்னீசியன், பி.எஸ்.சி. பட்டதாரிகளுக்கு அறிவியல் உதவியாளர் பணிகள் உள்ளன. மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் விண்வெளி மருத்துவம் மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிப் பிரிவுகளில் பணியாற்றலாம். நூலக அறிவியல் படித்தவர்களுக்கு நூலகர் பணிகளிலும் வாய்ப்பு உள்ளது.
கனவு மெய்ப்பட வேண்டும்
புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்து உருவாக்கம், மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள், நிலவில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது, எதிர்கால தகவல் தொடர்பு மற்றும் இணையச் சேவைகளை விண்வெளி வழியாக மேம்படுத்துவது உட்பட பல துறைகளில் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.
பிற நாடுகளைச் சார்ந்திராமல் விண்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று உலக அரங்கில் முன்னணி நாடாக உருவாக வேண்டும் என்பதே இஸ்ரோவின் முக்கிய இலக்காகும்.
விண்வெளித் துறையில் செயல்பட விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்ரோவின் இன்-ஸ்பேஸ் (IN-SPACe) போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
![]() |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரின் சாதனைகள், இன்றைய மாணவர்களிடம் விண்வெளித் துறையின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, தற்போது 20 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்வெளித் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கனவுகள் நனவாக அரசு பல்வேறு ஊக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் திறமையை சரியான திசையில் வழிநடத்தி, அவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்களும் பெற்றோரும் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்து உருவாக்கம், எதிர்கால தகவல் தொடர்பு மற்றும் இணையச் சேவைகளை விண்வெளி வழியாக மேம்படுத்துவது உட்பட பல துறைகளில் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது



