ADDED : மார் 07, 2026 06:10 AM

''தா ய் இறந்தது கூட அறியாமல், குட்டிக்குதிரை பால் குடித்த காட்சியை நேரில் பார்த்த அந்த நொடி, மனசை என்னவோ பண்ணி, கண்களை குளமாக்கியது. அக்குட்டியை பிழைக்க வைக்க படாதபாடுபட்டோம். தற்போது அது துள்ளி குதிக்கிறது. இப்படியாக என்னிடம் இங்குள்ள ஒவ்வொரு குதிரையின் பின்னணியிலும், நிறைய ரணங்கள் இருக்கின்றன,'' என்கிறார் ரித்திகா.
பொள்ளாச்சியில், ஆதரவின்றி தெருக்களில் விடப்பட்டு உணவின்றி தவிப்பவை, அடிபட்ட குதிரைகளை மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளித்து, மறுவாழ்வுக்கு வகை செய்கிறது, 'அனிமல் கேர் ரெஸ்க்யூ அண்டு ரீகேப்ளிடேஷன் என்டிவோர்ஸ் ட்ரஸ்ட்' (Animalcare Rescue and Rehabilitation Endeavours Trust). இதன் தலைவர் ரித்திகா. குதிரைகள் மீது ஏன் இவ்வளவு பிரியம் என்ற கேள்வியுடன் இவரை அணுகினோம்.
என் தாத்தா, அப்பாவிடம் குதிரைகள் இருந்ததால், சிறு வயதில் இருந்தே, குதிரைகள் பிடிக்கும். அவற்றுக்கான உணவுமுறை, பராமரிப்பு, கையாளும் விதம் பற்றிய அடிப்படை அறிவு இருப்பதால், குதிரைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால், என்னால் எளிதில் அடையாளம் காண முடிந்தது. இத்துடன், பராமரிக்க ஆளில்லாததால்,அடிபட்டு ஆதரவின்றி கிடக்கும்,நிறைய குதிரைகள் இறப்பதாக தெரியவந்தது. இதனால்தான் களங்கினேன்.
எங்களுக்கு, பொள்ளாச்சி அருகில் தோட்டம் இருப்பதால், மீட்கப்படும் குதிரைகளை இங்கேயே தங்க வைத்து பராமரிக்கிறோம்.
குதிரை மீட்பு அனுபவங்கள் பற்றி...
நான் மீட்ட முதல் குதிரை சிம்ஹா. பிறந்து சில நாட்களிலே அதை சாக்கடையில் வீசி விட்டனர். நான் மீட்டபோது, அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தொடர் மருத்துவ சிகிச்சையும், உணவும் தான், அதை பிழைக்க வைத்தது. அன்றைய இரவு முழுக்க, போர்வையை சுற்றி, என் மடியில் கிடத்தி 'பார்முலா' பால் கொடுத்தோம். அடுத்தநாள் கண்விழிக்கையில், அதன் கண்களில் நன்றியுணர்வை பார்த்தேன். அந்த உணர்வு தான் என்னை ஓட வைத்தது.
அம்மா இல்லாத குதிரைக்குட்டிகளுக்கு, மாட்டுப்பால் கொடுக்க முடியாது. குதிரைகளுக்கான பிரத்யேக பார்முலா பால், பெங்களூரு, டில்லியில் உள்ள இரு நிறுவனங்களிடம் மட்டுமே கிடைக்கும். பால் புட்டியில் கொடுத்து பழக்கினால், வேகமாக குடிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதனால் ஓரிரு வாரங்களுக்கு பின் கிண்ணத்தில் பால் குடிக்க பழக்க வேண்டும்.
பொதுவாக குதிரையின் ஆற்றலுக்கு, சத்தான உணவு கொடுக்க வேண்டும். காலையில் கோதுமையுடன், சில காய்கறிகள் அரைத்து கொடுப்பது வழக்கம். மாலையில், கோதுமை, பார்லி, கொள்ளு, கொண்டைக்கடலை, சில முக்கிய வைட்டமின்கள், குதிரைக்கான மருந்து சேர்த்து உணவாக கொடுப்போம். குதிரை மசால் புல், காய்ந்த அருகம்புல், இரவுக்கான உணவு.
சாப்பிட்டதும் அவை சுதந்திரமாக சுற்றி திரிவதால், செரிமான பிரச்னை ஏற்படாது. இவற்றை கட்டி போடுவதில்லை. சுதந்திரமாக சுற்றி திரிவதால், செரிமான பிரச்னை ஏற்படுவதில்லை.
தற்போது இங்கு 19 குதிரைகள் இருக்கின்றன. இவைகளுக்கு சிகிச்சை அளித்து உயிர்பிழைக்க வைத்ததில், கால்நடை மருத்துவர்கள் பாலமுருகன், யுகன்யாவின்பங்கு அளப்பரியது.நிறைய விலங்கு நல ஆர்வலர்களும் கைகோர்க்கின்றனர். இதனால் தான், என்னால் குதிரைகளுக்காக இயங்க முடிகிறது.

