ADDED : ஜூன் 26, 2026 11:34 PM

'பேஸ்மென்ட்' மண் நிரப்பும் போது மண்ணை இறுகச்செய்ய அளவுக்கதிகமான தண்ணீரை விட்டு சேறாக்கி, பின் கூழாக்கி கடப்பாரை விட்டு குத்தி சமப்படுத்தினால் தான் தரை பலமாக இருக்கும் என்பது ஒரு தவறான ஊகம் என்கிறார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
அவர் கூறியதாவது:
நீரே இல்லாமல் 'எர்த் ரேம்' போட்டுதான் மண்ணை கடினப்படுத்த(காம்பாக்ட்) வேண்டும் என்கிறது கட்டுமானப் பொறியியல். பேஸ்மென்டில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி இறுக வைப்பது தவறான செயலாகும். இதுபோல் பல தவறான ஊகங்களால் நிறைந்து இருக்கிறது கட்டுமானப் பணிகளின் பணி முறைகள்.
பெரிய அளவு எக்கு கம்பிகளை கட்டுமானத்தில் பயன்படுத்தினால் வலிமையாக இருக்கும் என்றும், வீட்டு அறையின் அளவு அகலம் 10 அடி இருந்தால் 8 மி.மீ., எக்கு கம்பிகள், 12 அடி இருந்தால் 10 மி.மீ., 16 அடி இருத்தால் 12 மி.மீ., (டயா) எக்கு கம்பிகள் 'ரூப் ஸ்லாப்'களுக்கு போட வேண்டும் எனவும் கருதுகிறார்கள்; வாதிடுகிறார்கள்.
இதுவும் தவறு. ரூப் ஸ்லாப்புகளின் வடிவமைப்பு, வீட்டு அறையின் அகலத்தை பொறுத்தும், எந்த பயன்பாட்டிற்காக கட்டடம் கட்டப்படுகிறது என்பதை பொறுத்தும், என்ன கிரேடு கான்கிரீட் என்பதை பொறுத்தும் பொறியாளரால் வடிவமைக்கப்படும்.
தேவைக்கேற்ப உறுதியாக செயல்பட வேண்டிய வடிவமைப்பு தேவை. இதில் பெரிய அளவு எக்கு கம்பி, சிறிய அளவு எக்கு கம்பி என்பது கிடையாது. கட்டட அளவுக்கு ஏற்ப பொறியாளரால் எக்கு கம்பியின் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஐ.எஸ்.கோடு 456-2000ல் ரூப் ஸ்லாப்களுக்கு 8, 10, 12 மி.மீ., எக்கு கம்பிகள் என குறிப்பிடவில்லை. எனினும் கட்டடத்திற்கு ஏற்ப எக்கு கம்பிகள் தேவை என்பதை வடிவமைப்பு தெரிவிக்கிறது. அதன்படி கட்டுமானத்திற்கு எக்கு கம்பிகள் கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறு, மாரிமுத்துராஜ் தெரிவித்தார்.
