வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மாற்று பொருட்கள்!
வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மாற்று பொருட்கள்!
ADDED : ஜூலை 04, 2026 07:33 AM

சொ ந்தமாக நிலம் வாங்கிய நபர்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டி இருப்பார்கள். அதில், அப்போதைய நிதி இருப்பு அடிப்படையில் குறைந்த பரப்பளவுக்கு தான் பெரும்பாலான மக்கள் தங்களுக்கான சொந்த வீட்டை கட்டி இருப்பார்கள் என்பதை பார்த்து இருப்போம்.
இவ்வாறு கட்டிய வீட்டை பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு இருக்கும் காலி நிலத்தில் கூடுதல் அறைகள் கட்டலாம் என்ற எண்ணம் ஏற்படும். இதன்படி பழைய கட்டடத்தின் மேல் புதிதாக கட்டடம் எழுப்பும் போது, அதனால் ஏற்படும் சுமையை தாங்கும்நிலை இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில், 2 மாடி அளவுக்கு ஏற்ற நிலையில் அஸ்திவாரம் அமைத்து இருந்தால் அங்கு கூடுதல் தளங்கள் கட்டுவதில் பிரச்னை இல்லை. ஆனால், தரைதள வீட்டுக்கு என்ற அடிப்படையில் மட்டுமே அஸ்திவாரம் அமைத்த நிலையில் கூடுதல் அறைக்கான தேவையை பூர்த்தி செய்வதில் பிரச்னை ஏற்படும்.
இது போன்ற நிலையில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு தான் புதிதாக பெரிய கட்டடத்தை கட்ட முடியும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. ஆனால், இதற்கு மாற்றாக, கட்டடத்தின் அடிப்படை சுமையை உயர்த்தாமல், கூடுதல் அறைகளை கட்ட மாற்று பொருட்கள் வந்துவிட்டன.
சில ஆண்டுகள் முன்பு வரை இப்படி கூடுதல் பாகங்கள் கட்டுவதில் ஸ்டெயிலஸ் ஸ்டீல் அடிப்படையிலான கம்பிகள், குழாய்கள் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது, இதில் எடை குறைந்த, அதிக சுமை தாங்கும் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த வகையில் தற்போது, எப்.ஜி.சி., எனப்படும், 'பைபர் கிளாஸ் காம்போசிட் புரோபைல்ஸ்' விற்பனை செய்யப்படுகின்றன. இதில் எளிதில் துரு பிடிக்காத, சுமை தாங்கும் பொருட்கள் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கட்டடத்தில், அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத, கூடுதல் அறைகள் கட்டுவதற்கு இந்த வகை மாற்று பொருட்களை பயன்படுத்தலாம். இதில் பல்வேறு அளவுகளில் கம்பிகளும், குழாய்களும் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
எப்.ஜி.சி., அடிப்படையிலான பொருட்களை, மலைப்பகுதிகள், கடலோர பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டடங்களை விரிவாக்கம் செய்யவும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. காலநிலை மாற்றங்களால் இது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதால் இதை எளிதாக பயன்படுத்தலாம்.
அடிப்படையில் எடை குறைந்த பொருள் என்பதால், சிக்கலான இடங்களிலும் குறைந்த நபர்களை பயன்படுத்தி இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். சராசரியாக, ஐந்து டன் அளவுக்கு சுமையை தாங்கும் வகையில் இவை தயாரிக்கப்படுகிறது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
எப்.ஜி.சி., அடிப்படையிலான பொருட்களை, மலைப்பகுதிகள், கடலோர பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டடங்களை விரிவாக்கம் செய்யவும் பயன்படுத்தலாம்.
