/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
ஆயுளை நீட்டிக்கும் கட்டட நிலை மதிப்பீடு சரியான நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது
/
ஆயுளை நீட்டிக்கும் கட்டட நிலை மதிப்பீடு சரியான நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது
ஆயுளை நீட்டிக்கும் கட்டட நிலை மதிப்பீடு சரியான நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது
ஆயுளை நீட்டிக்கும் கட்டட நிலை மதிப்பீடு சரியான நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது
ADDED : ஜன 24, 2026 05:24 AM

வீடு என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் சேமிப்பின் வெளிப்பாடு. அது வெறும் சுவர், துாண், மாடி அல்ல; குடும்பத்தின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்யும் இடம். எந்த கட்டடமாக இருந்தாலும் காலப்போக்கில் அதன் வலிமை குறைய ஆரம்பிக்கும்.
சுவர் விரிசல், ஈரம், நீர்கசிவு போன்றவை சாதாரணமாக தோன்றினாலும், அவை கட்டடம் தரும் எச்சரிக்கை அறிகுறிகள். கட்டட நிலை மதிப்பீடு என்பது கட்டடத்தின் பாதுகாப்பு நிலையை அறிவியல் முறையில் ஆய்வு செய்வது.
இதனால் கட்டடம் இன்னும் சுமையை தாங்கும் திறன் கொண்டதா, துாண்கள், பீம்கள் வலுவாக உள்ளனவா உள்ளிட்டவற்றை தெளிவாக அறியமுடியும் என்கிறார், கோவை மண்டல கட்டட பொறியாளர் சங்க(கொஜினா) செயலாளர் செந்தில்நாதன்.
அவர் மேலும் கூறியதாவது...
பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வீடுகள் மற்றும் கட்டடங்களில் இந்த மதிப்பீடு அவசியம். கூடுதல் மாடி கட்டும் முன், பழைய வீட்டை வாங்கும் முன், கடை போன்ற வணிக கட்டடங்களில் இந்த ஆய்வு முக்கியமானது.
நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பாதிப்புகளுக்கு பிறகு கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆய்வு தவிர்க்க முடியாதது. சுவர் அல்லது துாண்களில் தோன்றும் விரிசல்கள், மேல்தளத்தில் இருந்து தொடர்ந்து நீர் சொட்டுதல், சுவர் ஈரம் மற்றும் பூஞ்சை, சிமென்ட் உரிந்து விழுதல், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சரியாக மூட முடியாத நிலை போன்றவை கட்டடத்தின் வலிமை குறைந்து வருவதற்கான அறிகுறிகள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் கட்டடத்தை சேதப்படுத்தாமல், அதன் வலிமையை அறியும் அழிவில்லா சோதனைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. 'ரீபவுண்ட் ஹேமர்' சோதனை வாயிலாக கான்கிரீட்டின் மேற்பரப்பு வலிமை மதிப்பிடப்படுகிறது.
'அல்ட்ராசோனிக் பல்ஸ் வெலாசிட்டி' சோதனையில், கான்கிரீட்டின் ஒருங்கிணைப்பு அறியப்படுகிறது. இந்த ஆய்வு செய்யாமல் விட்டால், சிறிய விரிசல்கள் காலப்போக்கில் பெரிதாகி, கட்டடத்தின் சுமை தாங்கும் திறன் குறையும்.
இதன் விளைவாக திடீர் கட்டட இடிவு, உயிரிழப்பு, பெரும் பொருளாதார இழப்புகள், சட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சரியான நேரத்தில் செய்யப்படும் இம்மதிப்பீடு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

