அடையாளம் தெரியாத மனையை கண்டுபிடிக்க உதவும் சர்வேயர்கள்!
அடையாளம் தெரியாத மனையை கண்டுபிடிக்க உதவும் சர்வேயர்கள்!
ADDED : செப் 12, 2026 01:25 AM

தமிழகத்தில் கடந்த, 30 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எதற்கும் பயன்படுத்த முடியாதவை என்று இருந்த நிலங்கள் கூட தற்போது குடியிருப்புகளாக மாறி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
குறிப்பாக, 1990ம் ஆண்டுக்கு பின் பல்வேறு மாவட்டங்களில், நகரங்கள், புறநகர் பகுதிகளில் புதிய மனைப்பிரிவுகள் அதிக அளவில் வந்தன. அதில் பெரும்பாலானவை முறையான அங்கீகாரம் பெறாமல் இருந்ததால், தற்போது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் புதிய திட்டங்களில் எதிர்கால தேவைக்காக பெரும்பாலான மக்கள் மனைகளை வாங்கினர். இவ்வாறு மனை வாங்கியவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அதில் வீடு கட்டி குடியேறினர் என்றால் பெரும்பாலான மக்கள் காலி நிலங்களை அப்படியே வைத்துள்ளனர்.
இவ்வாறு காலியாக விடப்பட்ட நிலங்கள் காலப்போக்கில் புதர் மண்டிப்போய் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இது போன்ற பகுதிகளில் மனைகளின் எல்லையை குறிக்கும் அடையாள கற்கள் காணாமல் போயிருக்கும், அக்கம் பக்கத்து சூழல் மாறியதால், மனையை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.
இதில், 20 அல்லது, 30 ஆண்டுகள் கழித்து அந்த கிராமத்துக்கு சென்றால் தங்கள் மனை எது என்பதே பலருக்கும் தெரியாத நிலை உள்ளது. பத்திரம், பட்டா போன்ற அனைத்து ஆவணங்களும் கையில் இருந்தாலும், எங்கள் மனை எது என்று தெரியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது.
இத்தகைய சூழலில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசிடம் உரிமம் பெற்ற நில அளவையாளர்கள் உள்ளனர். இது போன்று தனியார் நில அளவையாளர்களை அணுகினால், அவர்கள், நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து, களத்தில் இறங்குவர்.
சொத்து தொடர்பான நில அளவை வரைபடம் உதவியுடன், டி.ஜி.பி.எஸ்., போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தி, உங்கள் நிலம் எது என்பதை அடையாளம் காட்டுவர். அத்துடன் ஆட்டோ கேட் முறையில் உங்கள் நிலம் தொடர்பான வரைபடங்களையும் துல்லியமாக தயாரித்து கொடுக்கின்றனர்.
கட்டண அடிப்படையிலான இந்த சேவையை பொதுமக்கள் தங்கள் சொந்த விருப்பம் மற்றும் வசதி அடிப்படையில் பயன்படுத்தலாம். இதில் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீண்டும் அந்த மனையை அப்படியே விடாமல், அதில் சுற்றுச்சுவர் அமைப்பது போன்ற வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றி, உங்கள் மனை எது என்பதை துல்லியமாக அறிந்த பின், அதில் கட்டுமான திட்டங்கள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடலாம். அடையாளம் தெரியாமல் கட்டுமான பணியில் இறங்கினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
அரசிடம் உரிமம் பெற்ற நில அளவையாளர்களை அணுகினால், அவர்கள் கள ஆய்வு செய்து நவீன கருவிகள் உதவியுடன் உங்களுடைய மனை எது என்பதை அடையாளம் காட்டுவர்.
