வெப்பநிலை சரி பார்க்காமல் கான்கிரீட் போடுவதால் விரிசல் ஏற்படும்!
வெப்பநிலை சரி பார்க்காமல் கான்கிரீட் போடுவதால் விரிசல் ஏற்படும்!
ADDED : ஆக 29, 2026 07:03 AM

இன்றைய சூழலில், கட்டுமான பணிகள் அனைத்து நிலைகளிலும் கான்கிரீட் கலவையை நம்பியே அமைந்துள்ளது. இதனால், கட்டுமான பணிக்கான கான்கிரீட் தயாரிப்பில், மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக கட்டடம் கட்டும் போது அதற்கு என்ன வகை கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வது போன்று கான்கிரீட்டையும் முடிவு செய்ய வேண்டும். கட்டடங்களில் துாண்கள், பீம்கள், மேல் தளம் போன்ற பாகங்களுக்கான கான்கிரீட் பொதுவாக எம்20 வகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் சிமென்ட், மணல், ஜல்லி ஆகிய பொருட்களை மொத்தமாக வாங்கி தேவையான அளவு கலந்து கலவை தயாரிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது, கட்டுமான பணிக்கு தேவையான கான்கிரீட்டை ரெடிமிக்ஸ் ஆலைகளில் இருந்து மக்கள் நேரடியாக வாங்குகின்றனர்.
உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு எந்த இடத்தில், எப்போது, என்ன அளவுக்கு கான்கிரீட் கலவை தேவை என்பதை இந்நிறுவனங்களிடம் தெளிவாக சொன்னால் போதும். நீங்கள் குறிப்பிடும் நேரத்துக்கு கான்கிரீட் கலவை தயார் நிலையில் வந்துவிடும்.
இதனால், காலையில் துவங்கி மாலை வரை நடக்கும் கான்கிரீட் போடும் பணிகள் ஒருசில மணி நேரங்களில் முடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பணி நேரத்தை குறைப்பதுடன், விரைவாக இறுகும் தன்மையுடன் கான்கிரீட் கலவை கிடைக்கிறது.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, உங்கள் வீட்டு பணிக்கு அனுப்பப்படும் கான்கிரீட் கலவை என்ன நிலையில் வருகிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.
இதில் ரெடிமிக்ஸ் ஆலையில் இருந்து எவ்வளவு நேரத்தில் கான்கிரீட் கலவை கொண்டு வரப்பட்டது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கான்கிரீட் கலவையில் ஈரப்பத நிலை என்னவாக உள்ளது என்றும், அதன் வெப்பநிலை என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.
பொதுவாக ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வாங்கும் போது அது திரவ நிலையில் குறிப்பிட்ட பதத்தில் இருக்கிறதா என்று மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். அதன் வெப்பநிலை என்ன என்பதையும் பொது மக்கள் கவனித்து பார்க்க வேண்டியது அவசியம்.
இந்திய தர நிர்ணய அமைப்பு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கான்கிரீட் கலவையை பயன்படுத்தும் முன் அதன் வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியஸ்க்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதற்கு மேல் வெப்ப நிலை இருந்தால் கான்கிரீட் கலவையை பயன்படுத்தாதீர்.
அதிக வெப்பநிலையில் கான்கிரீட் கலவையை பயன்படுத்தினால், கட்டடத்தில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கான்கிரீட் கலவை வாங்கும் போது வெப்பநிலை பார்க்காமல் பயன்படுத்த வேண்டாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
இந்திய தர நிர்ணய அமைப்பு வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கான்கிரீட் கலவையை பயன்படுத்தும் முன் அதன் வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியஸ்க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
