கூட்டு பட்டா உள்ள சொத்துக்களை வாங்குவதால் பிரச்னை வருமா?
கூட்டு பட்டா உள்ள சொத்துக்களை வாங்குவதால் பிரச்னை வருமா?
ADDED : ஏப் 11, 2026 07:06 AM

பொதுவாக சொத்து வாங்கும் போது அதை விற்பவரிடம் அனைத்து வகையான ஆவணங்களும் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். சொத்தின் விலையை பேசி முடிவு செய்த நிலையில், குறைந்தபட்சமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அடையாள முன்பணமாக கொடுத்து, ஆவண நகல்களை பெற வேண்டும்.
இவ்வாறு பெறப்பட்ட ஆவண நகல்களை வழக்கறிஞரிடம் கொடுத்து, அதன் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டும். இதில் அந்த சொத்து தொடர்பான முந்தைய பத்திரப்பதிவுகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா என்று பார்க்க வேண்டும்.
இந்த வகையில் சொத்துக்களின், 30 ஆண்டுக்கால பரிமாற்ற விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதில் பத்திரப்பதிவுக்கான வில்லங்க சான்று பார்ப்பது மிக மிக அவசியமான பணி என்பதை சொத்து வாங்குவோர் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில் பத்திரங்களை ஆய்வு செய்வதுடன் அதன் பட்டா தொடர்பான விபரங்களும் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த ஆண்டு யார் பெயருக்கு பத்திரம் பதிவானது அதில் சொத்தின் பரப்பளவு என்னவாக இருந்தது என்ற விபரம் பட்டாவுடன் ஒத்துப்போக வேண்டும்.
இது தொடர்பான விஷயங்களில் சொத்து வாங்கும் மக்கள் மிக மிக கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதில், தற்போது விற்பவர் அல்லது அதற்கு முந்தைய உரிமையாளர் பெயரில் பட்டா இருந்தால் போதும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
உண்மையில், நீங்கள் வாங்க விரும்பும் சொத்துக்கான பட்டா தற்போது யார் பெயரில் உள்ளது என்பதைவிட, அது என்ன வகை பட்டா என்பதையும் தெளிவாக விசாரிக்க வேண்டும். பொதுவாக, தனிப்பட்டா அடிப்படையில் சொத்து வாங்கும் போது பெரிய அளவில் பிரச்னைகள் இருப்பதில்லை.
ஆனால், கூட்டுப்பட்டாவில் உள்ள சொத்தை வாங்குவதனால், அதில் உண்மை நிலவரம் அறிய கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கூட்டு பட்டாவில் தற்போது யார் யார் பெயர் உள்ளது, அவர்களுக்கான சொத்து பங்கு அளவுகள் என்ன என்று பார்க்க வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளில் பெரும்பாலும், தனிப்பட்டாக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன, அப்படியே கூட்டு பட்டா இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இருப்பார்கள் என்பதால் இதில் விசாரணை பணிகளை எளிதாக முடித்துவிடலாம்.
ஆனால், ஊரக பகுதிகளில் சொத்துகளுக்கு, கூட்டு பட்டாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பெயர்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதில் உங்களுக்கு முன் சொத்து வாங்கிய வெளியார் பெயரும் இருக்கும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கூட்டுப்பட்டாவில் உள்ள விபரங்கள், வில்லங்க சான்றுடன் சரியாக பொருந்தி போகிறதா என்று கவனித்து பாருங்கள். இதில் அனைத்து விபரங்களும் பொருந்திப்போனால் மட்டுமே சொத்து வாங்குவது நல்லது என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
ஊரக பகுதி சொத்துக்களுக்கு, கூட்டு பட்டாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பெயர்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது, அதில் உங்களுக்கு முன் சொத்து வாங்கிய வெளியார் பெயரும் இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
