PUBLISHED ON : ஜூலை 13, 2021

வணக்கம்...
நான் சங்கீதா. செங்கல் சூளையில பல ஆண்டுகளா கொத்தடிமைகளா இருந்து அரசால மீட்கப்பட்ட 25 குடும்பங்கள்ல என் குடும்பமும் அடக்கம். விழுப்புரம், வீராணமூர் கிராமத்தில் அரசு வழங்கிய பசுமை வீட்டுல பெற்றோர் மற்றும் இரண்டு தங்கைகளோட வசிக்கிறேன். செஞ்சி,
ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்.
* சங்கீதாவிற்கு பிடித்த வெப்சீரிஸ்?
வெப் சீரிஸ்னா என்ன?
* தனித்து செய்த முதல் காரியம்?
பொது பேருந்தில் கல்லுாரி சென்றது!
* என்ன செல்போன் வைச்சிருக்கீங்க?
'ஆண்ட்ராய்டு'னு சொன்னாங்க!
* தவறாத அன்றாட பழக்கம்?
'டிவி'யில செய்திகள் பார்ப்பேன்!
* புத்தக வாசிப்பு உண்டா?
ஆசையுண்டு; ஆனா, வாய்ப்பில்லை!
கடன், வட்டின்னு இப்படியே எங்க பெற்றோர்கள் வாழ்க்கை போயிருச்சு. மீட்கப்பட்ட கொத்தடிமை குடும்பங்கள்ல இருந்து கல்லுாரிக்கு போயிருக்கிற முதல் நபர் நான்தான்!
சமூகத்தின் மகள்
பசுமை வீடு, குடும்ப அட்டை, அரசு பள்ளி படிப்புன்னு என் வாழ்க்கை மேம்பட்டதுல அரசுக்கு பெரும் பங்கிருக்கு. என் குடும்ப சூழ்நிலை உணர்ந்து கல்லுாரி நிர்வாகம் கல்வி கட்டணத்தை தள்ளுபடி பண்ணினாங்க! கல்லுாரிக்குப் போய் வர தினமும் பயணச் செலவு 60 ரூபாய். இப்போ, அரசு பேருந்துல இலவசமா பயணிக்கலாம்! இப்படி எனக்கு எல்லாம் தந்த இந்த சமூகத்துக்கு என் படிப்பால திருப்பிச் செய்யணும்... கண்டிப்பா செய்வேன்!
அலங்காரமில்லா அன்றாடம்
சங்கீதாவின் தந்தை சின்னசாமிக்கு விவசாயப் பணிகளே வருமான ஆதாரம். 100 நாள் வேலைக்கு செல்கிறார் தாய் லட்சுமி. இரு வேளைகளுக்கு மட்டுமே சமைக்கப்படும் உணவை தயாரிப்பது சங்கீதாவின் பொறுப்பு. விசேஷ நாட்கள், திருவிழாக்கள் என கொண்டாட்டங்கள் மீது ஈர்ப்பில்லாத வாழ்க்கை.
வீட்டில் அரிதாக தோசை, இட்லி...
அதனினும் அரிதாக சப்பாத்தி, பூரி சமைக்கின்றனர். வங்கி சேமிப்பு, காப்பீடு என எதிர்கால பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை;
ஆனாலும், வாழ்க்கை குறித்த பயமில்லை. இக்குடும்பத்திற்கு தடுப்பூசி, ஆக்சிஜன், கபசுர குடிநீர் எல்லாமே சங்கீதா ஸ்டெதெஸ்கோப் மாட்டி நிற்பதை பார்ப்பதுதான்!
மாணவியருக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் பயமுறுத்துதா?
இந்தமாதிரி நடந்தா பயப்படாம, அவமானமா நினைக்காம, கூச்சப்படாம தைரியமா புகார் சொல்லணும்னு பாதிக்கப்பட்ட மாணவியர் சமீபகாலமா உணர்த்திட்டு வர்றாங்க! இதனால, எனக்கும் எந்த பயமும் இல்லை.
