PUBLISHED ON : ஜூலை 07, 2021

லாரி ஓட்டுனரான கோபாலை ஒரு விபத்து நிலைகுலைய வைக்கிறது. அவரது குடும்பத்தையும், லாரியையும் அவரால் இனி முழு திறனோடு இயக்க முடியாது. இச்சூழலில் மனைவியின் குரல்...
'நான் லாரி ஓட்டுறேன்; எனக்கு கத்துக் கொடுங்க!'
'ஆறு மாசமாச்சு; ஆம்பள என்னாலேயே முடியலை. இவளால லாரி ஓட்டிர முடியுமா' நக்கலாக சொல்லிச் சென்ற உறவினர் இன்று ஆச்சரியமாகப் பார்க்கிறார்; ஆம்... சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த பெரியபனங்காட்டைச் சேர்ந்த 55 வயது செல்வமணி கோபால் சாதித்து நிற்கிறார்.
ஓட்டுனர் இருக்கையில் மனைவி; உங்க மனநிலை என்ன?
அவளுக்கு நாலு வயசு இருக்கும்போதே அவங்க அப்பா தவறிட்டாங்க. அப்போ இருந்து உழைக்கிறா; என் வாழ்க்கைக்கு வந்ததுக்கு அப்புறமும் அவளுக்கு ஓய்வில்லை. அவ தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் முன்னால என்னோட 'ஆண்'ங்கிற அடையாளம் பலதடவை தோற்றுப் போயிருக்கு. இவ்வளவு ஏன்... என் மனைவி லாரி ஓட்டும்போது மட்டும்தான் பின்னிருக்கையில நான் பயமில்லாம துாங்குறேன்!
மூத்த மகனான உங்களுக்கு அம்மா ஆச்சரியமா தெரிஞ்சது எப்போ?
அருள்முருகன்: 'நெஞ்சுல ஒரு கட்டி வலிச்சுக்கிட்டே இருக்கு'ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. லாரி ஓட்டுறதனால ரத்தம் கட்டி வலியெடுத்திருக்கும்னு தான் எல்லாரும் நினைச்சிட்டு இருந்தோம். எதேச்சையா ஒருநாள் அம்மாவோட பேட்டியை பார்க்கும்போது தான் அவங்களுக்கு 'புற்றுநோய்' இருந்ததே தெரிஞ்சது.
விஷயம் தெரிஞ்சு நாங்க உடைஞ்சுடக் கூடாதுன்னு எங்களுக்கு தெரியாம சிகிச்சை எடுத்துட்டு இருந்திருக்காங்க! நிச்சயமா அவங்களைத் தவிர யாராலேயும் இப்படியொரு மோசமான உடல்நிலையில உழைச்சிருக்க முடியாது.
மோகனபிரபு பார்வையில் செல்வமணி?
இளைய மகன்: ம்ம்ம்... அப்பா நொறுங்கி இருந்த நேரத்துல அம்மா நம்பிக்கை கொடுக்காம இருந்திருந்தா, அப்பாவால மீண்டு வந்திருக்க முடியாது. இன்னைக்கு ஒரு லாரியை சொந்தமாக்கி இருக்க முடியாது. எங்க சொந்த வீடு ஆசை கனவாகவே இருந்திருக்கும். எங்க வசதிக்கு மீறின கல்லுாரிகள்ல நாங்க படிச்சிருக்க முடியாது. இது எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம்!
'இனி ஓய்வெடுங்க' - இந்த வார்த்தைகளுக்காக காத்திருக்கீங்களா செல்வமணி?
பசங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி பேரக் குழந்தை பார்த்தாச்சு. ஆனாலும், வீட்டுலேயே இருக்கப் பிடிக்கலை. அவர் லாரி ஓட்டுற காலங்கள்ல வீட்டு சாப்பாட்டுக்கு தவிச்சுப் போவாரு;
இப்போ, என் கையால மூணு வேளையும் சாப்பாடு போடுறேன்.
இதெல்லாத்தையும் விட, அவர் அருகாமையில லாரி ஓட்டுறப்போதான் அவர்கிட்டே மனசு விட்டு பேச நேரம் கிடைக்குது; எனக்கு ஓய்வு வேண்டாம்.
