PUBLISHED ON : ஜூலை 01, 2015

ராஜன், என்னை சந்திக்க அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், மதுரையிலிருந்து ரயிலேறி விட்டார் என்ற தகவலை, மதுரையில் இருக்கும் மருத்துவ நண்பர் கூறினார்.
ராஜனுக்கு வாழ்க்கை, வாழ்வா, சாவா என்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. ராஜனை விட, அவரது மனைவி, குழந்தைகளை பார்க்க பரிதாபமாக இருந்தது. 'எப்படியாவது என் கணவரை காப்பாற்றி விடுங்கள். அவரது இதயத்தை ஸ்திரப்படுத்தி கொடுங்கள்' என்று கெஞ்சினார்.
ராஜனின் பிரச்னை சிறிதல்ல; பெரிது. காரணம், அவரது, ௨௦வது வயதில், 'ருமாடிக்' காய்ச்சல் வந்து அதன் தாக்கத்தால், அவரது இதயத்தில் 'மைட்ரல்' எனும் வால்வில் அடைப்பு ஏற்பட்டது. அதற்காக, அவருக்கு, திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பின், அவர் சில காலத்திற்கு தீவிர கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்; மனிதர் கவனிக்காமல் விட்டுவிட்டார் போல் தெரிகிறது.
இன்று, இதயத்தையே சிறிது சிறிதாக செயலிழக்க வைக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதாகிவிட்டது. 'டிரைக்கஸ்பிட்' எனும் வால்வு, இதயத்தின் வலது பக்கம் வலது 'ஆரிக்கிள்' மற்றும் வலது 'வெண்டிரிக்கிள்' ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.
அதில், தற்போது ராஜனுக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, மறுபடியும் 'மைட்ரல்' மற்றும் 'அயோடிக்' வால்வுகளில் அடைப்பு மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு; அதோடு இதய செயல்பாடும் மிக குறைவாக இருந்தது.
ராஜன் கூறுகையில்,'கடந்த ஓராண்டாக மூச்சுத் திணறல் இருந்து கொண்டே இருந்தது; நெஞ்சு வலி வேறு. அலுவலக வேலைகளை செய்ய முடியாமல், ஒரு கட்டத்தில் வீட்டிலேயே முடங்க ஆரம்பித்து விட்டேன். இதய செயல்பாடு குறைய ஆரம்பித்து விட்டதை என்னால் உணர முடிந்தது' என, வேதனை நிறைந்த கண்களுடன் கூறினார்.
மருத்துவ துறை மிகவும் மகத்தானது தான்! சந்தேகமே இல்லை! ஆனால் அதிலும், சில சிக்கல்கள் இருக்கிறதல்லவா! இதை சொல்ல காரணம், ராஜன் ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கு ஆளானவர் என்பதால், முதலில் அறுவை சிகிச்சையை தாங்கும் அளவிற்கு அவரை தயார் செய்தோம்.
மீண்டும் திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்ய, மார்பு கூட்டை அறுத்து உள் நுழையவே, மூன்று மணிநேரம் ஆகிவிட்டது. காரணம், ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சையால், திசுக்கள் கடினமாகி இறுகியிருக்கும். பின் சேதம் அடைந்த இரண்டு வால்வுகளையும் அகற்றி, செயற்கை வால்வுகளை பொருத்தினோம்.
மூன்றாவது வால்வு, சீர் செய்யும் நிலையில் இருந்ததால், அதை சீராக்கினோம். ரத்த நாளத்திலுள்ள அடைப்பை சரிசெய்ய, 'பைபாஸ்' சிகிச்சை மற்றும் இதய செயல்பாட்டை அதிகரிக்க, மற்றொரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஒவ்வொரு சிகிச்சையின் போதும் பாதிக்கப்பட்ட பகுதியை சீராக்க, இதயத்தை அறுத்து சீர்செய்து, பின் தையல் போடப்பட்டது. அறுவை சிகிச்சை செய்ய, ௧௦ மணிநேரம் முழுமையாக தேவைப்பட்டது.
ஒன்பது நாட்களில், ராஜன் உடல்நிலை தேறி, ௧௦வது நாள் மதுரைக்கு ரயிலேறி விட்டார். இந்த சிகிச்சை முறை, மேலை நாடுகளில் மட்டுமே இருந்தது.
தற்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. அதை, நான் பயிற்சி பெற்று செய்கிறேன் எனும் போது மகிழ்ச்சியே. ஒவ்வொரு முறையும், இப்படி சிக்கலான உடல்நிலையுள்ள நோயாளிகளின் பிரச்னைகளை தீர்த்து, அவர்களின் புன்சிரிப்பை பார்க்கும் போது, மனதுக்குள் கம்பீரமாய் உதிக்கும் வார்த்தை, 'மருத்துவராய் இருப்பதில் பெருமைப்படுகிறேன்' என்பதே.
- எம்.எம்.யூசுப்,
நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
குளோபல் மருத்துவமனை, சென்னை.
