PUBLISHED ON : ஜன 01, 2023

முப்பது ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பொதுவான மருத்துவ காரணங்களுக்காக பரிசோதனை செய்யும் போது, 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனையில், 'பேட்டி லிவர்' எனப்படும், கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது தெரிந்தால், அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை; ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை.
கல்லீரல் பாதிப்பு யாருக்கு வரும் என்று கேட்டால், 'மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு' என்று சொல்லி விடுவர். இது தவிர, 'ஹெபடைடிஸ் பி, சி' வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கல்லீரல் பாதிக்கலாம். இப்போது, 'சி' வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை உள்ளது; 'பி' வைரசுக்கு தடுப்பூசி உள்ளது. எனவே, இந்த இரண்டு தொற்றும் வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த சில ஆண்டுகளில், 'பேட்டி லிவர்' பிரச்னை இருந்தால், 'சிரோசிஸ்' எனப்படும் கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சர் பாதிப்பு ஏற்படுகிறது; சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. நாம் பொதுவாக நினைக்கும் சில காரணங்களால், கல்லீரல் செயலிழப்பது இல்லை; வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களால் கல்லீரலில் சேரும் கொழுப்பால், கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
கல்லீரலில் கொழுப்பு படியும் போது, அழற்சி ஏற்பட்டு, கல்லீரல் சுரக்கும் என்சைம்களின் அளவு அதிகரிக்கலாம். என்ன காரணத்திற்காக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தாலும், அதில் பேட்டி லிவர் இருப்பது தெரிந்தால், உடனடியாக ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி முறையான உடற்பயிற்சி, எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்தால், இந்த பிரச்னையை கட்டுப்படுத்த முடியும். கல்லீரலுக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்குமே ஆழ்ந்த துாக்கம் மிகவும் அவசியம்.
டாக்டர் கே.ஆர்.பழனிசாமி,
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
அப்பல்லோ மருத்துவமனை,
சென்னை.
98414 14500
