PUBLISHED ON : டிச 03, 2020

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் நேரத்தில் எல்லாம் சிப்ஸ், பிஸ்கட், கேக், சாக்லேட் என்று வாங்கித் தருகின்றனர்; உடற்பயிற்சி, விளையாட்டு எதுவும் இல்லாமல், உட்கார்ந்த இடத்திலேயே மொபைல் போனை கையில் வைத்தபடி சாப்பிடுகின்றனர்.
இதனால், அதிகப்படியான கலோரி உடலில் சேர்ந்து, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இயல்பான விஷயமாகி விட்டது. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று அழைத்து வரும் குழந்தைகளை பரிசோதித்தால், உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது.
உயரம், வயதிற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல், உடல் பருமனுடன் இருப்பதாலேயே இந்தப் பிரச்னை என்று சொல்வதைப் பெற்றோரால் ஏற்க முடிவதில்லை.
பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவுக்கு அதிகம் இருப்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியானது. அதிலும், சிப்ஸ் உட்பட மொறுமொறுப்பாக உள்ள தின்பண்டங்களில், மிக அதிகமான உப்பு உள்ளது. 'இன்ஸ்டன்ட்' நுாடுல்ஸ் மற்றும் சூப் வகைகளிலும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உப்பும், வேதிப் பொருட்களும் சேர்க்கின்றனர்.
அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுவது, பசை அதிகம் உள்ள உணவு என்பதால், பற்களில் ஒட்டிக் கொள்ளும்; பாதிப்பை ஏற்படுத்தும். சிப்ஸ் மட்டுமல்ல, இந்திய நிறுவனங்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனையாகும் மிக்சர், காராபூந்தி, முறுக்கு, சேவு போன்ற அனைத்து வகைகளிலும் அதிக உப்பு, கொழுப்பு அல்லது இரண்டும் உள்ளன.
உப்பு, சர்க்கரை அளவுகள்!
உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில் உட்பட தேசிய, சர்வதேச அமைப்புகள், ஒரு நபர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, உப்பு, 5 கிராம், கொழுப்பு, 60 கிராம், கார்போ ஹைட்ரேட், 500 கிராம், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கரையாத கொழுப்பு, 2.2 கிராம் எடுத்துக் கொண்டால் போதுமானது.
இத்துடன், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கிய சமச்சீரான உணவு, ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 2,000 கலோரி போதுமானது.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல மருத்துவர், கோவை.
80672 38877

