PUBLISHED ON : ஜூலை 24, 2016
அடுத்தவருக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று, வியர்வை துர்நாற்றம். என்னதான், நல்ல வாசனை சோப்பு தேய்த்து குளித்தாலும், வியர்வை நாற்றம் அகன்று போகாது. இதை மறைக்க, விலை உயர்ந்த சென்ட் அல்லது பாடி ஸ்பிரே பயன்படுத்தினாலும், மீண்டும் துர்நாற்றம் வீசும்.
ஏதாவது விசேஷத்துக்கு செல்லும் போது, வியர்வை துர்நாற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வேறு ஆட்கொள்கிறது.
உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும் போது தான், வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும் போது, பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
உடல் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றல், எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சை பழத்தை, இரண்டாக அறுத்து, தினமும் தேய்த்து குளித்து வர, நாளடைவில் துர்நாற்றம் போகும். இம்முறையை கையாளும் போது, சோப்பு, ஷாம்பு எதையும் பயன்படுத்தக் கூடாது.
உடல் துர்நாற்றத்துக்கு, நாம் சாப்பிடும் உணவும் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக, அசைவ உணவின் பங்கு அதிகம். முடிந்தவரை, அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப் பண்டங்களையும் குறைத்துக் கொண்டால் வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.
சாதாரண நீர் அருந்துவதை விட, சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.
உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில், இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே, வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.
