கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: குறட்டை வருவது எதனால்?
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: குறட்டை வருவது எதனால்?
PUBLISHED ON : மார் 18, 2018

'டாக்டர்... என் கணவர், துாக்கத்தில் மூச்சு விடுவதற்கு, சிரமப்படுகிறார். நன்றாக துாங்கும் நேரத்தில், அவர், மூச்சு திணறுவதை பார்க்கும் போது, பயமாக இருக்கிறது. சத்தமாக குறட்டை விடுகிறார்.
'சமயங்களில், துாக்கத்தில் மூச்சு விடுவது நின்று விடும்; பயத்தில் அவரை உலுக்கி, எழுப்பி விடுவேன்' என, ஆலோசனைக்கு வந்த பெண், தன் கணவரை பற்றி, சற்றே பதற்றத்துடன் சொன்ன விஷயம் இது.
இரவில் துாங்கும் போது குறட்டை விடுவது, பகலில் துாக்க கலக்கமாகவே இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால், சுவாச மண்டலத்தில் பிரச்னை இருக்கலாம். எனவே, தேவையான அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை செய்து, மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.
பகலில் துாங்குவது, இரவில் துாங்கும் போது, குறட்டையால் துாக்கம் தடைபடுவது... இவை, 'ஸ்லீப் அப்னியா' எனப்படும், துாக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள்.
தொண்டைப் பகுதியில் உள்ள தசைகள், துாக்கத்தின் போது, பலவீனமாக இருப்பது இதற்கு காரணம்.
பிறவியிலேயே இந்த தசைகள் பலமிழந்தும் இருக்கலாம். உடல் பருமன், வெளிப்புற நாடிப் பகுதியில் உள்ள வேறுபாடுகள் என, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
துாங்கும் போது, மூச்சுக் காற்று நுரையீரலுக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. இது, இயல்பாகவே உடலில் ஆக்சிஜன் அளவை குறைத்து விடும். இந்த நிலை, மூளையைத் துாண்டி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, துாக்கத்தில் இருந்து எழ வைக்கிறது.
அடிக்கடி இப்படி துாக்கத்தில்இருந்து எழுவது, ஆழ்ந்த துாக்கத்தை தடை செய்கிறது. இதனால், பகலில் அயர்ச்சியாகவும், துாக்க கலக்கமும் இருப்பதை தவிர்க்க முடிவதில்லை.
இரவில் போதுமான அளவு துாக்கம் இல்லாவிட்டால், பகலில் செய்ய வேண்டிய வேலைகளை, முழு கவனத்துடன் செய்ய முடிவதில்லை. யோசித்துப் பாருங்கள்... ஒரு டிரைவருக்கு இது போன்ற துாக்கப் பிரச்னை இருந்தால், பகலில், பணி நேரத்தில், எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்று!
சரியான துாக்கம் இல்லாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட, பல உடல் பிரச்னைகள் ஏற்படும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் பருமன் உடையோருக்கு இந்தப் பிரச்னை வரலாம். 'பாலிசோனோகிராபி' என்ற பரிசோதனை மூலம், ஒரு மணி நேரத்தில், எத்தனை முறை ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்பதை, எளிதாக கண்டறியலாம்.
அதனடிப்படையில், தேவையான சிகிச்சை தர வேண்டும். ஐந்து முறை மூச்சுத் திணறல் ஏற்பட்டால், குறைந்த அளவு; 30 முறை என்றால், மிக அதிக அளவு. இதற்கு, சி.பி.ஏ.பி., எனப்படும், தொடர்ந்து சுவாசக் குழாயில் அழுத்தம் தரும் கருவியை பொருத்துவதன் மூலம் தீர்வு காணலாம்.
டாக்டர் ஏ.சுரேஷ்,
சுவாசக் கோளாறுகள் சிறப்பு மருத்துவர், சென்னை.
suramya95@gmail.com

