PUBLISHED ON : ஏப் 03, 2022

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில், கல்லீரல் பாதிப்பும் நிறைய இருந்தது. அந்த சமயத்தில், மற்ற எல்லா உறுப்புகளும் எப்படி பாதிக்கப்பட்டதோ, அதே போன்று இது இன்னொரு பாதிப்பு என்று நினைத்தோம். கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலையாக வெளிப்பட்டது.
நிறைய பேருக்கு, கல்லீரலில் உள்ள செல்கள், பித்தப்பை முழுமையாக செயலிழந்து இருந்தன. 'கொரோனா' போன்ற புதிய வகை வைரஸ் உள்ளே நுழைந்ததும், அதை அழிப்பதற்காக, வழக்கத்திற்கு அதிகமாக நோய் எதிர்ப்பு செல்கள் அதை தாக்கும். அந்த இடம், 'சைட்டோகைன் ஸ்டார்ம்' எனப்படும் புயல் அடித்தது போல ஆகிவிடும். கொரோனா வைரஸ் அழிந்து விட்டது; அதன் பாதிப்பு தீவிரமானது.
இதற்கென பிரத்யேக மருந்துகள் கிடையாது. கல்லீரலுக்கு நுண்ணுாட்ட சத்துக்கள் தரக்கூடிய, ஆதரவு மருந்துகள் தான் தர முடியும். இதைக் கொடுத்தும் எந்த பலனும் இல்லாமல், மஞ்சள் காமாலை தீவிரமானது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் இதற்கு ஒரே வழி என்ற நிலையில், கொரோனா பயம் காரண மாக, பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன; பல நோயாளிகளை காப்பாற்ற முடியவில்லை.
மூன்றாவது அலையில், 'ஒமைக்ரான்' இது போன்ற எந்த தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. லேசான மஞ்சள் காமாலை இருந்தவர்களுக்கும் தானாகவே சரியாகி விட்டது. எந்த வைரசாக இருந்தாலும், அதன் மரபணுவில் மாற்றம் தொடர்ந்து ஏற்படும் போது, படிப்படியாக வீரியம் குறைந்து விடும்.
இதற்கு முன் வந்த 'சார்ஸ், மெர்ஸ், ப்ளூ' வைரஸ்களை போன்று இதுவும் இருக்கும். ப்ளூ வைரஸ் போன்று, ஆண்டிற்கு ஒரு முறை வருகிறதா என்று இனிமேல் தான் தெரியும்; மரபணு மாற்றத்திற்கு ஏற்ப தடுப்பூசி தேவைப்படலாம்.
டாக்டர் ஜாய் வர்கீஸ்,
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்,
குளோபல் மருத்துவமனை, சென்னை.
97911 66081
