PUBLISHED ON : பிப் 08, 2026

கு ழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் போது, நல்ல சத்தான, குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் அளவுக்கு சுவையாக இருப்பது அவசியம். 5 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பாடு சாப்பிடுவதற்கு சிரமப்பட்டாலோ, ஆர்வம் காட்டாமலோ இருக்கும் பட்சத்தில் இட்லி, தோசை, உப்புமா தருவது தவறு.
குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற உணவு தர வேண்டும். ஒரு நாளைக்கு 3 - 4 முறை, அவர்களின் எடைக்கு தகுந்த உணவு தருவது அவசியம்.
நொறுக்குத்தீனி, பழங்கள், பழச்சாறு, சுண்டல், கடலை மிட்டாய், எள் உருண்டை, கேரட், வெள்ளரிக்காய் துண்டுகள் தரலாம்.
எடை குறைவான குழந்தைக்கு...
வயதிற்கேற்ற உடல் எடை, உயரத்துடன் குழந்தை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
எடை குறைவாக இருந்தால், குழந்தைக்கு தேவையான கலோரி, புரதம் தர வேண்டும்.
மூன்று வேளைக்கு பதிலாக நான்கு வேளை தரலாம்.
ரத்த சோகை, பசியின்மை, எடை குறைதல், சோர்வு, படிப்பில் கவனம் குறைவது, விளையாட்டிலும் ஆர்வம் இல்லாதது...
மண், பல்பம், அரிசி சாப்பிடும் பழக்கம், வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாதது, முக வீக்கம், கண், நாக்கு, வாய், உதடுகள் வெளிறி போய் இருத்தல், கை, கால் பாதம் வெளுத்து இருப்பது, ரத்த சோகைக்கான அறிகுறிகள்.
எதனால் வருகிறது?
ரத்த சோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஊட்டச்சத்து குறைவால், இரும்பு சத்து குறைவால் வரும் ரத்த சோகை தான் பொதுவானது.
போதிய ஊட்டச்சத்து தராதது, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் தராதது, 2 வயது வரை பால் மட்டுமே தருவது, குடல் புழுக்கள் இருப்பது, ரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
இரும்பு சத்து நிறைந்த வெல்லம், கருப்பட்டி, பச்சை காய்கறிகள், பழங்கள், பேரீச்சம் பழம், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றை தினசரி உணவில் தர வேண்டும்.
வைட்டமின் 'ஏ' குறைபாடு
முன்பு இருந்த அளவுக்கு இல்லையென்றாலும், இன்றும் வைட்டமின், 'ஏ' குறைபாடு குழந்தைகளிடம் காணப்படுகிறது.
வைட்டமின், 'ஏ' சத்து நிறைந்த உணவுகள் என்றால், நம் தேசியக் கொடியின் வண்ணங்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
ஆரஞ்சு: பப்பாளி, ஆரஞ்சு, கேரட், மாம்பழம்.
வெள்ளை: பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை.
பச்சை: பச்சை நிற காய்கறிகள்.
நீலம்: மீன் உள்ளிட்ட கடல் உணவுகள்.
ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலும், அதன்பின், தாய்ப்பாலுடன், இணை உணவாக காய்கறிகள், பழங்கள், பால் என எல்லாவித உணவுகளும் தரும் போது, வயதுக்கேற்ற எடை, நல்ல மூளை வளர்ச்சியுடன் குழந்தைகள் வளர உதவும்.
டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை,
குழந்தைகள் நல மருத்துவர்,
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,
திருவள்ளூர்.
94444 75309
Email: sppillai26@yahoo.co.in

