PUBLISHED ON : நவ 29, 2015

வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக, நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்குதான். பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே இன்னொன்றும் வந்து சேர்கிறது. அது... மன அழுத்தம்!
இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும், அது சிறிது நேரத்துக்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொழுதுபோக்குகளை பின்பற்றி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
புத்தகம் படிப்பது என்பது, மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும். தினசரி யோகாசன பயிற்சி செய்வதால், உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஓய்வு பெறும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனம் சாந்தமாகி, பின் அமைதி அடையும். கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில், முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே.
வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, இசை பெரிதும் உதவி புரிகிறது. தோட்டக்கலையில் ஈடுபடலாம். அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தால், அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மனம் இயற்கையாகவே அமைதியடையும்.
சமைப்பது மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. சமையல் செய்வதால் சிந்தனையானது, தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி
விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்துக்கு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி, எழுதுவது.
அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாகவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவற்றை எப்படியும் கொட்டித் தீர்ப்பதாக இருக்க வேண்டும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும். இது மட்டுமல்லாது, உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதாலும் மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து, மன நிம்மதியுடன் வாழ்வோம்.

