பனஞ்சாறு, பனஞ்சிராய், பானகம், பனாட்டு, காவோலை, பனை ஈர்க்கு, பனங்கிழங்கு, பனைவெல்லம், பனம் கற்கண்டெல்லாம் புதிய தலைமுறைக்கு புரியாத வார்த்தைகள். பனையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, கூடைகள், பாய், தூரிகைகள் இன்று பயன்பாட்டுப் பொருளாய் இல்லை. நான்கைந்து தலைமுறைக்கு முன்புவரை, சுமார், 843க்கும் மேற்பட்ட பனை சார்ந்த பொருள்கள் தமிழர்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளன.
தும்பு, ஈக்கு, விறகு, ஓலை, நாரென மனிதர்களுக்கு அட்சய பாத்திரமாய் அள்ளித்தந்த பனை, எறும்பு, பூச்சி, பல்லி, பறவைகளென நூற்றுக்கும் மேலான உயிரினங்களுக்கு வாழ்க்கையும் அளித்தது.
ஒரு பனை ஆண்டுக்கு, 180 லிட்டர் பதநீர் தரும். அதில், 25 கிலோ பனைவெல்லம், 16 கிலோ பனஞ்சீனியை பெறலாம். பனைபடு பொருள்கள் உணவாக மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்பட்டன.
பனங்கருப்பட்டியுடன் கடுக்காய், பால், இளநீர், சுண்ணாம்பு சேர்த்து நமது பாட்டனும், பாட்டியும் கட்டிய வீடுகளில் சில பேரன்களும், பேத்திகளும் வாழவே செய்கிறார்கள்.
பனங்கீற்று வேயப்பட்ட குடிசைகளும் எஞ்சியிருக்கின்றன. பனங்கருப்பட்டியை பயன்படுத்தி தயாரிக்கும் காப்பி, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று பெரும்பாலான வீடுகளில் வெள்ளை சர்க்கரைதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த சர்க்கரை ஆபத்தானது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பனங்கருப்பட்டியை பழக்கப்படுத்துவதன் வாயிலாக, வெள்ளைச் சீனியால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க முடியும். இப்படி பனையின் பெருமைகள், அந்த மரத்தைப் போலவே நீள்கின்றன.

