PUBLISHED ON : மார் 22, 2026

உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படுவது இன்றைக்கு பொதுவான விஷயமாக உள்ளது. இது போன்ற உணர்வு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பலருக்கும் கூட இந்த உணர்வு வருகிறது. பல ஆண்டுகளாக சர்க்கரை நோயாளிகளாக இருப்பவர்களுக்கும், புதிதாக சர்க்கரை நோயாளிகளாக மாறுபவர்களுக்கும் வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் தவிர, பித்த தோஷம் அதிகமாக உள்ளவர்களுக்கும், முதுகு வலி, முதுகுத் தண்டில் பிரச்னை இருப்பவர்க ளுக்கும் இது போன்ற உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படுவதுண்டு.
எரிச்சல் அறிகுறிகளை குறைப்பதற்கு, வீட்டு வைத்தியம் எதுவும் சொல்ல முடியாது. காரணம், எரிச்சல் ஏன் வருகிறது என்பதை உறுதி செய்த பின்னரே மருந்து தர முடியும்.
ஆனால், பித்த தோஷம் காரணமாக ஏற்பட்ட எரிச்சல், அறிகுறிகளை குறைக்க, உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்து பார்க்கலாம்; இது தவிர, வெளிப்பூச்சாகவும் சிலவற்றை செய்யலாம்.
நெல்லிக்காயை விழுதாக அரைத்து பாலில் கலந்து, உள்ளங்கை, காலில், இரவு படுக்க செல்வதற்கு முன், பற்று போடலாம். ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னை இருந்தால் இதை தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெய், பசு நெய்யில் கலந்தும் தடவலாம். இரவில் துாக்கப் பிரச்னை இருந்தால், பசு நெய் யிற்கு பதிலாக, எருமை நெய்யில் கலந்து தடவலாம்.
முல்தானி மட்டி, கற்றாழை, சந்தனம் இவற்றையும் பூசலாம்.
உணவில் தினமும் நெல்லிக்காய் சேர்க்கலாம். புளி, தக்காளி, பச்சை மிளகாய் போன்ற பித்தத்தை அதிகரிக்கும் பொருட்களை தவிர்த்து, கொத்தமல்லி தழை, தேங்காய் அதிகம் சேர்க்கலாம்.
இது பித்தத்தை குறைத்து, எரிச்சலை கட்டுப்படுத்தும்.
டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர், சென்னை. 89399 33150healerhari@gmail.com

